சட்டமன்றம் வரை ஒலித்த ஈஷா யோகா மைய `ஆக்கிரமிப்பு’ விவகாரம்: மௌனம் காக்கிறதா தமிழக அரசு?!

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையம், வனப்பகுதியையும் யானைகள் வழித்தடங்களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தமிழக சட்டமன்றத்தில் நடந்திருக்கும் விவாதம் மீண்டும் ஈஷா யோகா மைய ஆக்கிரமிப்பு விவகாரத்தை கிளறியிருக்கிறது.

நேற்று முந்தினம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹசன் மௌலானா, “பல இடங்களில் பழைய யானைகள் வழித்தடங்கள் மறைக்கப்பட்டு சாலைகள், கட்டடங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் யானை வழித்தடங்கள் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கின்றன” எனக் குற்றம்சாட்டி பேசிக்கொண்டிருக்க… உடனே அவரை இடைமறித்த சபாநாயகர் அப்பாவு, `இப்போது நேரமில்லை.. இதுகுறித்து அமைச்சர் பதிலளிப்பார்’ என்று கூறினார்.

துரைமுருகன் – வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்

அதையடுத்து இதற்குப் பதிலளித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், “யானை வழித்தடங்கள் குறித்த முழு அறிவு எல்லோருக்கும் கிடையாது. இன்னும் அதைபற்றி நிறைய விஷயங்கள் தெளிவு படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் யானை வழித்தடங்கள் தொடர்பாக ஆய்வு செய்து, மக்கள் கருத்துகேட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. இதற்கு முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, யானைகள் ஆராய்ச்சியாளர்களை வைத்து தீவிரமாக ஆராய்ந்து பிறகு அடுத்தடுத்து முடிவுகள் எடுக்கப்படும். அதனால் அவசரப்பட்டு எந்த கருத்தும் சொல்லவேண்டாம்!” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “யானைகள் வழித்தடங்கள் குறித்து பேசினீர்கள்… ஆனால், அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளையெல்லாம்(Reserve Forest) பிடித்துக்கொண்டு, பில்டிங் கட்டிக்கொண்டு, யானைகள் போக்குவரத்தையெல்லாம் ஈஷா தடுத்திருக்கிறார்கள் என்று பத்திரிகைகளில் நிறைய செய்திகள் வந்திருக்கின்றன. ஆக, ஈஷா வனத்துறையின் பர்மிஷன் பெற்றுதான் அந்த இடங்களையெல்லாம் பிடித்திருக்கிறதா… யானை வழித்தடங்களை மறைத்திருக்கிறது என்று சொல்வது உண்மையா… பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கை வைத்திருக்கிறதா இல்லையா? என்று நேரடியாக உறுப்பினர்(ஹசன் மௌலானா) பதில் கேட்கிறார்” என்று தெரிவித்தார்.

ஹசன் மௌலானா, காங்கிரஸ் எம்.எல்.ஏ

அதற்கும் பதிலளித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், “ஈஷா பற்றிய முழுமையான விவரங்களைத் தெரிந்துகொண்ட பிறகுதான் நான் சொல்ல முடியும். எதுவும் தெரியாமல் அரைகுறையாக நான் சொல்லக் கூடாது. ஆய்வுக்குப் பிறகு அதில் அவர்கள் விதிமீறல்கள் செய்திருக்கிறார்களா, தேவையான அனுமதி வாங்கியிருக்கிறார்களா என்பதை பார்த்துவிட்டு அதற்கான பதிலைத் தருகிறேன்” என்று பதிலளித்தார். உடனே அமைச்சர் துரைமுருகன் , “நீங்கள் பதவியேற்று மூன்றாண்டுகாலம் ஆகிவிட்டது. மூன்றாண்டுகளாகியும் இதுபற்றி நீங்கள் ஆய்வுசெய்யவில்லையா? என்று அவர் கேட்கிறார்” என்று கூறினார். அதன்பிறகு இந்த விவாதம் தொடராத வகையில் `போதும்’ எனக்கூறி முடிவுக்கு கொண்டுவந்தார் சபாநாயகர் அப்பாவு.

ஈஷா

இந்த விவாதம்தான் தற்போது தமிழக அரசியல் தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. அதேநேரம் இந்த விவகாரத்தில் தி.மு.க அரசு மற்றும் அமைச்சர்களின் மாறுபட்ட போக்குகள் விவாதத்தை ஏற்படுத்திவருகின்றன.

குறிப்பாக, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஈஷா யோகா மையத்துக்கு ஓர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக உங்கள்மீது ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டிருந்தது. அதையடுத்து, இந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கவேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈஷா அறக்கட்டளை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ்மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக்கூறி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

அந்தநிலையில், தி.மு.க அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா அறக்கட்டளை வனத்துறையின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என மத்திய அரசின், மத்திய தணிக்கை குழு அறிக்கையிலேயே (CAG Report – Comptroller and Auditor General of India) இருக்கிறது” என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேசமயம், அமைச்சரின் கருத்துக்கு மாறாக, `ஈஷா யோகா மையம் வனப்பகுதியில் எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை’ என தமிழக அரசு சார்பில் ஆர்.டி.ஐ-யில் பதில் தெரிவிக்கப்பட்டிருந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த தினேஷ்ராஜா என்பவர் ஈஷா ஆக்கிரமிப்பு தொடர்பாக கோவை வனக்கோட்ட பொது தகவல் அலுவலருக்கு ஆர்.டி.ஐ மூலமாக கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பதிலில், “ஈஷா யோகா மையத்தால் வனப்பகுதியில் எந்த ஆக்கிரமிப்போ அத்துமீறலோ செய்யப்படவில்லை. ஈஷா யோகா மையத்தின் கட்டுமானங்கள் எதுவும் வனப்பகுதியில் இல்லை! அதேபோல வரையறுக்கப்பட்ட யானைகள் வழித்தடம் என்ற எதுவும் இல்லை!” எனத் தெரிவிக்கப்பட்டது. இது சூழலியலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அதையடுத்து அப்போதைய வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன், “கோவை ஈஷா யோகா மையம் ஒரு சென்ட் நிலத்தைக்கூட ஆக்கிரமிக்கவில்லை என அறிக்கை கொடுத்திருக்கிறது. ஈஷாவால் வனத்துறையின் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்தப் பகுதியில் மீண்டும் ஆய்வு நடத்தப்படும்!” எனத் தெரிவித்தார். இந்த சர்ச்சைகளுக்கு இடையில் கடந்த 2023-ம் ஆண்டு ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்தியில் தி.மு.க அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார். இதுவும் தி.மு.கவின் இரட்டை நிலைப்பாடு என விமர்சிக்கப்பட்டது.

ஈஷா நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ்

இதுமட்டுமல்லாமல் சமீபத்தில்கூட, 2024 ஜூன் 1-ம் தேதி ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் கன்னியாகுமரியில் மரக்கன்றுகள் நடும் விழாவையும் அமைச்சர் மனோ தங்கராஜ்தான் தொடங்கி வைத்தார். அதேபோல, ஜூன் 23-ம் தேதி ஈஷா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நடத்திய உணவுக்காடு வளர்ப்பு மற்றும் காவேரி கூக்குரலின் முக்கனி விழாவில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி எம்.எம். அப்துல்லா, `வனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கு ஈஷா உள்ளிட்ட ஏனைய அமைப்புகளுக்கும் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்திருந்தார். அதற்கு விளக்கமளித்த எம்.எம் அப்துல்லா, “ஈஷாவுக்கு மட்டுமல்ல.. அவர்களோடு இணைந்து பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த நிகழ்வை முன்னெடுத்தனர். அத்தனை பேருக்கும்தான் வாழ்த்து தெரிவித்தேன்!” எனத் தெரிவித்தார்.

`ஈஷா விவகாரத்தில், தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க அமைச்சர்களிடத்திலேயே ஒருமித்த கருத்து இல்லாதது போன்றே தெரிகிறது. இது தான் அரசின் மெளனத்துக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள்.’

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88