மந்திரிக்க அழைத்த தந்தை; கோபத்தில் தாயை அடித்துக் கொன்ற மனநலம் குன்றிய மகன் – திருச்சி அதிர்ச்சி!

திருச்சி, பாலக்கரை துரைசாமிபுரம், தனமணி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மனைவி ஜெயந்தி (வயது: 42). கலியமூர்த்தி சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், மகன் என இரண்டு பிள்ளைகள். உள்ளனர். இதில், இவர்களது மகன் கிருஷ்ணசாமி (வயது: 21) கடந்த ஆறு மாதங்களாக உடல்நிலை குன்றியும், மனநிலை பாதிக்கப்பட்டும் இருந்துள்ளார். இதனால், இந்த இளைஞரின் பெற்றோர் இவரை பல்வேறு கோயில், பள்ளிவாசல் போன்ற இடங்களுக்கு மந்திரிக்க அடிக்கடி அழைத்து சென்றுள்ளனர். ஆனால் இப்படி, பெற்றோர் அடிக்கடி அழைப்பது கிருஷ்ணசாமிக்கு பிடிக்காததால், பெற்றோர் மீது கோபமாக இருந்துள்ளார். இந்நிலையில், அவரது தந்தை கலியமூர்த்தி, ‘கோயில் ஒன்றுக்கு மந்திரிக்கப் போக வேண்டும்’ என்று அழைத்திருக்கிறார். இதனால், கோபமடைந்த கிருஷ்ணசாமி தாய் ஜெயந்தியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

கொலை செய்த கிருஷ்ணசாமி

இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்ற, கோபமடைந்த கிருஷ்ணசாமி வீட்டில் இருந்த மண்வெட்டி கட்டையை எடுத்து தாய் ஜெயந்தி தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த பாலக்கரை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை குறித்து விசாரணை நடத்தினர். அதோடு, கொலை செய்யப்பட்ட ஜெயந்தி உடலை உடற்கூராய்வு செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், தாயை கொலை செய்த கிருஷ்ணசாமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனநிலை சரியில்லாத தன்னை மந்திரிக்க அழைத்த தாயை இளைஞர் ஒருவர் மண்வெட்டிக் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களை அதிர வைத்திருக்கிறது.