நாடாளுமன்ற கூட்டம்: “பாரதத்துக்கு சேவையாற்ற ஒருமித்த கருத்து மிகவும் முக்கியம்” – பிரதமர் மோடி

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 18-வது மக்களவைக் கூட்டம் இன்று புதிய நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கியது. இந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் புதிய எம்.பி-கள் பதவி பிரமாணம் செய்துவைக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், இன்று புதிய நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “18-வது மக்களவையின் தொடக்கக் கூட்டத் தொடர், இந்திய ஜனநாயகத்தின் மைல்கல். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு அரசுக்கு சேவை செய்யும் வாய்ப்பை நாட்டு மக்கள் வழங்கியிருப்பதால் இந்தத் தேர்தலும் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மோடி

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், எம்.பி-க்கள் பதவியேற்பு விழா நடக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களையும் நான் மனதார வரவேற்று, நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அரசை வழிநடத்துவதற்கு பெரும்பான்மை தேவை என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காகதான் கடந்த 10 ஆண்டுகளாக, ஒரு வழிமுறையை செயல்படுத்த முயற்சித்தோம். நாட்டை வழிநடத்துவதற்கும், பாரதத்துக்கு சேவையாற்றுவதற்கும் ஒருமித்த கருத்து மிகவும் முக்கியமானது.

எனவே, 140 கோடி மக்களின் ஆசைகள், லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு, அனைவரின் சம்மதத்துடன், அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வதற்கான நிலையான முயற்சிகளை எங்கள் அரசு மேற்கொள்ளும். அரசியலமைப்பின் புனிதத்தைப் பேணுவதன் மூலம், அனைவரையும் ஒன்றிணைத்து, முடிவுகளை விரைவுபடுத்தி, முன்னோக்கிச் செல்லவே விரும்புகிறோம். நாளை ஜூன் 25. இந்திய ஜனநாயகத்தின் மீது போடப்பட்ட கறை(எமர்ஜென்ஸி)யின் 50 ஆண்டுகளை ஜூன் 25 குறிக்கிறது.

நரேந்திர மோடி

அன்று இந்திய அரசியலமைப்பு முற்றிலும் நிராகரிக்கப்பட்டது, அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டு, நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டு, ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டதை இந்தியாவின் புதிய தலைமுறை ஒருபோதும் மறக்காது. அதனால், இந்த அரசு நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்து, இந்திய ஜனநாயகத்தையும், ஜனநாயக மரபுகளையும் காக்கும். இனி இந்தியாவில் இதுபோன்ற செயலைச் செய்ய யாரும் துணியாதவாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சாதாரண மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை எடுப்போம்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88