வன்னியர் இட ஒதுக்கீடு கேட்ட ஜி.கே.மணி… `சாதிவாரி கணக்கெடுப்பு’ என மத்திய அரசை கைகாட்டிய ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கேட்டது, அதற்கு முதலில் மத்திய அரசு சாதிவாரி நடத்தவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியது என காரசார விவாதம் அரங்கேறியிருக்கிறது. ஆனால், இந்த விவாதத்தில் ஸ்டாலின் பேசியது மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. அதில் ஸ்டாலின், “இந்தப் பிரச்னைக்கு நல்ல தீர்வுகாண வேண்டுமென்றால் சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்பட வேண்டும். அதற்காக, சட்டமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறோம். ஜி.கே.மணி அதற்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ஸ்டாலின்

ஸ்டாலின் பேசுவதற்கு முன்பும், பேசியதற்குப் பின்பும் அவை நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. அந்த சமயத்தில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த ஜி.கே.மணி, செய்தியாளர்களிடம் உள்ளே நடந்ததைக் குறிப்பிட்டு பேசுகையில், “10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து கடைசியில் இருக்கும் மாவட்டங்கள் வன்னியர்கள் வாழக்கூடிய பின்தங்கிய வட மாவட்டங்கள். இவையெல்லாம் போக்கவேண்டுமென்றால் நிலுவையில் இருக்கின்ற 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என்பதைக் குறிப்பிட்டுப் பேசினேன். இதில் சபாநாயகர், அமைச்சர்களுக்குப் பேச வாய்ப்பு கொடுத்துவிட்டு என்னைப் பேசவே விடவில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு ஆகிய இரண்டும் தனித்தனி பிரச்னை. உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரமிருக்கிறது. ஆனால், இப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தித்தான் இதனைக் கொடுக்க முடியும் என்கிறார்கள். இஸ்லாமியர்கள் மற்றும் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியது எல்லாம் மாநில அரசுதான்.

பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி

இதைச் சொல்லிக் கேட்டால், அவையில் அமைச்சர்கள் அதை திசைதிருப்புகிறார்கள். மத்திய அரசின் கூட்டணியில்தானே இருக்கிறீர்கள் மத்திய அரசைக் கேளுங்கள் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்க மூன்று வருடங்களாகத் தரவுகளைச் சேகரித்துவிட்டு, இப்போது மாநில அரசு இதைச் செய்ய முடியாது மத்திய அரசைக் கேளுங்கள் என்கிறார்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேட்கிறது. அப்படியென்றால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இதைத் தக்கவைக்க வேண்டாமா…

மோடி, ஸ்டாலின்

இது சமூகநீதி பிரச்னை. சட்டமன்றத்தில் இதைக் கேட்டால் கூட்டணி அரசியலைப் பற்றி பேசுகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசும் நடத்தலாம், மாநில அரசும் நடத்தலாம். மாநில அரசுக்கு அந்த அதிகாரமிருக்கிறது. பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடத்தப்பட்டிருக்கிறது. அங்கெல்லாம் நடத்தும்போது, சமூகநீதியின் பிறப்பிடம் என்று சொல்லும் தமிழ்நாட்டில் நடத்தக் கூடாதா… மாநில அரசு ஏன் நடத்த மறுக்கிறது” என்று கேள்வியெழுப்பினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb