Russia: தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு; காவல்துறை அதிகாரிகள், பாதிரியார் உட்பட 15 பேர் பலி!

ரஷ்யாவின் தாகெஸ்தானின் மகச்சலாவில் உள்ள ஜெப ஆலயத்திற்கு துப்பாக்கி ஏந்தி வந்த 4 பேரும், அதே நேரம் டெர்பெண்டில் உள்ள தேவாலயத்துக்கும் துப்பாக்கி ஏந்தி வந்த இருவரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த எதிர்பாரத தாக்குதலில், காவல்துறை அதிகாரிகள், ஒரு பாதிரியார் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

செர்ஜி மெலிகோவ்

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாகெஸ்தான் ஆளுநர் செர்ஜி மெலிகோவ், “மகச்சலாவில் நான்கு துப்பாக்கி ஏந்தியவர்களும், டெர்பென்ட்டில் துப்பாக்கி ஏந்திய இருவரும் நுழைந்து சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில், காவல்துறை அதிகாரிகள், டெர்பெண்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஒரு ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் உட்பட பலர் இறந்திருக்கிறார்கள். மேலும், இரண்டு தேவாலயங்களுக்கு தீ வைத்திருக்கிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை காவல்துறை சுட்டுக் கொன்றது.

இந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்… அவர்கள் என்ன நோக்கத்துக்காக இதை செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். போர் நம் வீடுகளுக்கு வரும் என்பதை புரிந்து கொண்டோம். இன்று அதை எதிர்கொள்கிறோம். இந்த ஸ்லீப்பர் செல்களை தாக்குதல்களுக்கு தயார் செய்தவர்களை உள்நாடு, வெளிநாடு உட்பட அனைத்துப் இடங்களிலும் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சிப்பார்கள்.

ரஷ்யா – தீவிரவாத தாக்குதல்

மேலும், ஜூன் 24 முதல் 26 தேதிகளை தாகெஸ்தானில் துக்க நாட்களாக அறிவிக்கப்படுகிறது. கொடிகள் அரைக் கம்பத்தில் இறக்கப்பட்டு, அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.