கள்ளக்குறிச்சி: “விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாக ஸ்டாலின் உள்ளார்..!” – ஹெச்.ராஜா

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 55- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. இச்சம்பவத்தில் தமிழக அரசை குற்றம்சாட்டி அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பாஜக ஆர்பாட்டம்

மதுரையில் இன்று நடந்த ஆர்பாட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். அப்போது ஸ்ட்ரட்சர் ஒன்ற பாடை போல் வடிவமைத்து மலர்களை தூவி தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய அனுமதி இன்றி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதால் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உட்பட ஏராளமானோரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “கள்ளச்சாராய விவகாரத்தில் நான் ஓடி ஒளியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டமன்றத்தில் பேசினார். ஆனால், இன்று ஓடி ஒளிந்துள்ளார். பாஜகவின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். விஷ சாராய உயிரிழப்பை தடுக்க துப்பில்லாத ஸ்டாலின் அரசு, எங்களின் ஆர்ப்பாட்டத்தை தடுக்கிறது.

பாடை போல் சித்தரித்து ஆர்பாட்டம்

தமிழக மக்கள் 40-க்கு 40 என்று திமுக-வுக்கு வாக்களித்தது கொல்வதற்குதான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சாராய சாம்ராஜ்யத்தின் நிறுவனரே கருணாநிதிதான். கொலைகார ஆட்சியாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓடி ஒளிந்துகொண்டு காவல்துறையினரை வைத்து பாஜகவினரை தடுக்கிறார்.

கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்த நபர்களின் போட்டோக்களை வீடு வீடாக சென்று சேர்த்தால் காவல்துறையினர் தடுப்பார்களா? மோசமான தீய திமுக அரசு வேரோடு அழிக்கப்பட வேண்டும்.

திமுக ஆட்சி தமிழ்நாட்டில் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு ஆபத்துதான். இளம் விதவைகள் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கிறார்கள் என்று கனிமொழி சொன்னார், உங்கள் அண்ணன் ஸ்டாலின் இன்னும் 57 இளம் விதவைகளை அதிகரித்துள்ளார். தமிழக பாசிச திமுக அரசை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆர்பாட்டத்தில் ஹெச்.ராஜா

நேற்றைய தினம் சட்டமன்றத்தில் நான் பயந்து ஓடி ஒளியவில்லை என்று முதலமைச்சர் சொல்கிறார். இந்த பாஜக ஆர்ப்பாட்டத்தை சந்திக்க முதலமைச்சருக்கு தைரியம் இல்லை. என்றைக்கு இந்த கருணாநிதி அரசு, சாராய அரசாக மாறியதோ அன்றிலிருந்து தமிழகத்தில் பெண்களின் தாலி அறுப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. 55 பேர் இறந்ததை பற்றி கவலைப்படாத தமிழக முதலைமைச்சர் ஒரு கோழை. ஓடி ஒளியும் கோழை ஸ்டாலின்.. ” என்று காட்டமாக பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88