கள்ளக்குறிச்சி துயரம்: “தமிழக அரசு, காவல்துறையின் அலட்சியப் போக்கே காரணம்!” – இயக்குநர் பா.ரஞ்சித்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதுவரை அதிகாரப்பூர்வத் தகவலில் 34 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், இந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பாக இன்று காலை நடந்த முதலமைச்சர் தலைமையிலான அவசர ஆலோசனைக்குழு நடந்தது.

ஸ்டாலின்

அந்த ஆலோசனைக்குப் பிறகு, கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆணை பிறப்பித்திருக்கிறார்.

இதற்கிடையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார். பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், `கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும் திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பிருக்கிறது’ என வெளிப்படையாக குற்றம்சாட்டியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ம.தி.மு.க தலைவர் வைகோ, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கண்டனங்களை தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில்,“கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்!

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

இயக்குநர் ரஞ்சித்

இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88