PM Modi Oath Ceremony : மூன்றாவது முறையாக பிரதமராகும் மோடி – இன்று பதவியேற்பு விழா! – Modi Sworn In | Live Updates

மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த பாஜக, இந்தமுறை தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போகவே, தெலுகு தேசம் மற்றும் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் 543 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க, 240 இடங்களில் வெற்றிபெற்றது. அதேபோல அந்தக் கட்சியின் தலைமையிலான கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்றது.

Modi (மோடி) – மத்தியில் அமையும் கூட்டணி ஆட்சி!

அதைத் தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வேலைகள் என்.டி.ஏ தரப்பில் மும்முரம் காட்டப்பட்டது. மூன்றாவது முறையாக மோடியே மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறார். அதேபோல என்.டி.ஏ கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

NDA – மோடி

ஆனால், அமைச்சரவையைப் பொறுத்தவரையில் இந்த முறை பலத்த மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், பா.ஜ.க ஆட்சி அரியணையில் அமர்வதற்கு, முக்கியப் பங்காற்றிய டி.டி.பி, ஜே.டி.யூ மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் துறைகளை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க இருக்கிறது. எனவே, முக்கியமான சில துறைகளை தங்களிடத்தில் வைத்துக்கொண்டு, `4 எம்.பி-க்களுக்கு 1 அமைச்சர் பதவி’ என்ற கணக்கில் கூட்டணிக் கட்சியினருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த பதவி ஒதுக்கீடு பணிகள் திரை மறைவில் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் ஆதரவு எம்.பி-க்களின் பட்டியலுடன் குடியரசுத் தலைவரைச் சந்தித்து ஆட்சியமைக்க கடந்த வெள்ளிக்கிழமை உரிமை கோரினார், மோடி. குடியரசுத் தலைவரும் அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஆட்சியமைக்குமாறு மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

PM Modi Oath Ceremony (மோடி) : புதிய அரசின் அமைச்சரவையில் 30 பேர்?

மோடி (Modi)

இன்று மாலை 7:15 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைக்கிறார். மோடியைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறும் பிறரும் பதவி ஏற்பார்கள். அமைச்சரவையில் மொத்தம் 30 பேர் இடம்பெறுவார்கள் எனச் சொல்லப்படும் நிலையில், யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கீடு செய்வதென்ற ஆலோசனை தொடர்ந்து நீடித்து வருவதாக, டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.