அக்னிவீரர் திட்டத்தைக் கைவிட வைப்பதில் பிடிவாதம் காட்டும் நிதிஷ் – பின்னணி என்ன?

மத்தியில் அமையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இடம்பெறும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், அக்னிவீரர் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

ராணுவ வீரர்கள்

மோடி அரசு கொண்டுவந்த அக்னிவீரர் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவிய சூழலில்தான், 2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க படுதோல்வியடைந்திருக்கிறது.

இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கப்பற்படை போன்ற ஆயுதப்படைகளுக்கு புதிய முறையில் ஆள்சேர்க்கும் விதமாக, `அக்னிபத்’ எனும் புதிய திட்டத்தை 2022-ம் ஆண்டு பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய அக்னிவீரர் திட்டத்தில், பெண்கள் உள்பட தேர்தெடுக்கப்படும் இளைஞர்கள், ஆறு மாத காலம் ஆயுதப்படைப் பயிற்சியுடன் சுமார் நான்கு ஆண்டுக்காலம் பணியாற்றுவார்கள்.

மோடி

அக்னிவீரர் திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு நான்காண்டு காலம் மாதம் ரூ. 40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்கள், `அக்னி வீரர்கள்’ என்று என்றழைக்கப்படுவார்கள். நான்காண்டுகாலப் பணி முடிந்த பிறகு, அதிலிருந்து 25 சதவிகிதம் பேர் மட்டும் திறமையின் அடிப்படையில் நேரடியாக இந்திய ஆயுதப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

நீண்டகாலப் பணி, ஓய்வூதியம், பழைய தேர்வு முறையில் இருந்த சலுகைகள், உரிமைகள் உள்ளிட்ட பல நலத் திட்டங்கள் எதுவும் அக்னி வீரர் திட்டத்தில் கிடையாது. இந்தத் திட்டம் நாடாளுமன்றத்திலோ, பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிலோ விவாதிக்கப்படவில்லை. இந்தத் திட்டம் பற்றிய எந்தத் தகவலும் அதன் அறிவிப்புக்கு முன்பு பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை.

ராகுல் காந்தி

இந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும், இந்தத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அப்போதே வலியுறுத்தின. இந்தத் திட்டம் நாட்டு நலனுக்காகவோ, நாட்டின் பாதுகாப்புக்காகவோ கொண்டுவரப்படவில்லை என்று காங்கிரஸ் விமர்சித்தது. எதிர்க்கட்சிகள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியும்கூட, அக்னிவீரர் திட்டத்தை பா.ஜ.க அரசு வாபஸ் பெறவில்லை.

அக்னிவீரர் திட்டத்துக்கு எதிராக பீகாரிலும் பெரும் போராட்டம் நடைபெற்றது. அக்னிவீரர் திட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர்கள், மக்களவைத் தேர்தலில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க தோல்வியடைந்ததற்கு அக்னிவீரர் திட்டமும் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது.

சந்திரபாபு நாயுடு – நிதிஷ் குமார்

இந்த நிலையில்தான், அக்னிவீரர் திட்டத்துக்கு நிதிஷ் குமார் தற்போது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தயவில்தான் மோடி ஆட்சி 3.0 செல்ல வேண்டும் என்ற நிலை இருப்பதால், நிதிஷ் குமாரின் இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க இருக்கிறது.

அக்னி வீரர்கள் திட்டத்தை நிதிஷ் குமார் ஏன் எதிர்க்கிறார்? ‘அக்னிவீரர்கள் திட்டம் கொண்டுவரப்பட்டபோது, ராணுவத்தினர் மத்தியிலேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர்களின் குடும்பத்தினர் தேர்தலில் தங்கள் எதிர்ப்பை காண்பித்திருக்கிறார்கள். எனவே, இது குறித்து பரிசீலிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது’ என்கிறார் ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கே.சி.தியாகி.

பிரதமர் மோடி – நிதிஷ் குமார்

பீகாரில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், அதில் அக்னிவீரர்கள் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிதிஷ் குமாருக்கு இருக்கிறது. தற்போது இந்தத் திட்டத்துக்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். நெருக்கடி கொடுக்கும் இடத்தில் நிதிஷ் குமார் இருக்கிறார். அவரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் பிரதமர் மோடி இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த ஆட்சியில் மோடி அரசு இந்த திட்டத்தை கொண்டு வர காட்டிய தீவிரம், இந்த மோடி 3.O-விலும் நீடிக்குமா என்பது சந்தேகம் தான்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88