அஸ்திவாரம் போட்ட வேலுமணி! – மீண்டும் உருவாகிறதா அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி?!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 35 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது அதிமுக. ஆனால், எதிர்பாராத விதமாக 7 இடங்களில் டெபாசிட் போயிருக்கிறது. இது அதிமுகவுக்கு பெரிய அடியாக இருந்தாலும், வாக்கு சதவிகிதத்தை அதிகரித்து இருப்பதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

முன்னதாக, பா.ஜ.க-வுடனான கூட்டணி முறிவு ஏற்பட்டதுபோது, ‘பா.ஜ.க-வுடான கூட்டணியால்தான் ஆட்சியை இழந்தோம்’ என்று சொல்லி வந்த அ.தி.மு.க தலைவர்கள், தற்போது ‘கூட்டணியாக இருந்தால் 35 இடங்களில் வெற்றிப் பெற்று இருப்போம்’ என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில்…

இது முறிந்த கூட்டணியை ஒட்டவைக்கும் முயற்சிதான் என்கிறார்கள் அ.தி.மு.க சீனியர்கள் .

இதுதொடர்பாக அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களிடம் பேசினோம். “ஒற்றைத் தலைமை விவகாரம் முடிந்த பிறகு, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையால் எங்களுக்கும், அந்தக் கட்சிக்கும் இடையே உரசலானது.

அண்ணா தொடங்கி அம்மா வரை எல்லாரையும் தரக்குறைவாக விமர்சனம் தொடங்கினார் அண்ணாமலை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் மிரட்ட தொடங்கினார். இது கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் அனலை கிளப்பியது. பா.ஜ.க-வுடனான உறவை முறித்துக்கொள்ளத் துடித்தனர்.

அண்ணாமலை

ஆனால், டெல்லி பா.ஜ.க தலைமை தன்னிடம் இணக்கமாக இருப்பதாக நிர்வாகிகளிடம் சமாளித்தார் இ.பி.எஸ். அண்ணாமலை அதிமுகவை அட்டாக் செய்யும்போதே, டெல்லியில் நடந்த என்.டி.ஏ கூட்டத்தில் கலந்து கொண்டதோடு, அமித் ஷாவுடம் தனிப்பட்ட முறையிலும் சந்தித்து பேசி இருந்தார். ஆனால், அண்ணாமலை பேச்சை குறைக்கவே இல்லை. போதாகுறைக்கு, அண்ணாமலையில் செயலை பாஜக கண்டிக்காததால், உறவை நீடிக்கவைக்கமுடியவில்லை. பா.ஜ.க-வுடனான உறவை 2023 செப்.25-ம் தேதி முறித்துக் கொண்டது அதிமுக. ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில் செழிப்பான துறையை கையில் வைத்திருந்த மாஜிக்களுக்கும் இது பிடிக்கவில்லை.

ஆனால், பா.ஜ.க குறித்தோ, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தோ திடமான எதிர்ப்பை எடப்பாடி முன்வைக்கவில்லை. இரண்டாம் கட்டத் தலைவர்களைப் பேசவும் அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு வந்த மோடி உள்ளிட்ட பா.ஜ.க தேசிய தலைவர்கள், அ.தி.மு.க-வை அட்டாக் செய்யவில்லை.

அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

இதுதான், ‘கூட்டணி முறிவு என்பதே நாடகம்’ என்ற தி.மு.க-வின் பிரசாரத்துக்கு ‘கன்டென்ட்’ ஆகிவிட்டது. ஆனால், அண்ணாமலையும் தமிழக பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வை தாக்கி பேசிக் கொண்டேதான் இருந்தது. இதை சமாளிக்கதான், ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி இருந்ததால்தான் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்கவில்லை. கூட்டணி இருந்ததால்தான் ஆட்சியை இழந்தோம்’ என்று பதிலுக்கு அட்டாக்கை தொடங்கினோம்.

தற்போது தேர்தல் முடிவுக்கு பிறகு, அண்ணாமலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கூட்டணி இருந்தால் 30 சீட்களுக்கு மேல் இருப்போம் என்று சொல்லிக் கொண்டே, அ.தி.மு.க-வை அட்டாக் செய்துவிட்டார்.

இதற்கு பதிலடி கொடுப்பதாக பேட்டி கொடுத்த வேலுமணி, அண்ணாமலையில் கருத்தை வழிமொழிந்து தலைமையின் மனதில் இருப்பதை போட்டு உடைத்திருக்கிறார். ‘ கூட்டணி இருந்திருந்தால் 35 சீட்களை கைப்பற்றி இருப்போம்’ என்று சொல்லி, மீண்டும் கூட்டணிக்கு தொண்டர்களை தயார் செய்து இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி

கூட்டணி முறிந்ததற்கு அண்ணாமலை மட்டும்தான் என்று ஆரம்பத்தில் இருந்தே தலைமை சொல்லி வருகிறது. தற்போது தேர்தல் முடிந்த பிறகும், கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என்று வேலுமணி சொல்வது இ.பி.எஸ்ஸின் கருத்துதான். தற்போது பா.ஜ.க மீண்டும் மேலே ஆட்சி அமைத்திருக்கும் இந்நிலையில், தங்கள் கழுத்துக்கு எப்போதுவேண்டுமென்றாலும் கத்தி வரலாம் என்ற எண்ணத்தில்தான், கூட்டணியை மீண்டும் ஒட்டவைக்க பேட்ஜ் ஒர்க்குக்காக வேலுமணி இப்படி பேசி இருக்கிறார். ஆனால், இது முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்ற தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், விரைவில் நடக்கவிருக்கும் மா.செ.க்கள் கூட்டத்தில் இதுதொடர்பாக பெரும் வெடிகுண்டு நிச்சயம் வெடிக்கும்.” என்றனர் விரிவாக.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88