`மோடி மீது மக்களுக்கு கோபம் இருக்கிறது என்று முன்பே கூறியிருந்தேன்!’ – சமாளிக்கும் பிரசாந்த் கிஷோர்

ஜூன் 4-ம் தேதி வெளியான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 370 இடங்களுக்கு மேல் பெறும் என்று ஜூன் 1-ம் தேதி வெளியான கருத்துக்கணிப்புகளை முற்றிலும் பொய்யாகியது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில், பா.ஜ.க கடந்த இரு தேர்தல்களில் பெற்ற தனிப்பெரும்பான்மையைக் கூட பெறாமல் 240 இடங்களை மட்டுமே பெற்றது. இருப்பினும், என்.டி.ஏ கூட்டணி 293 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. அதேபோல், இந்தியா கூட்டணி 234 இடங்களையும், அதில் காங்கிரஸ் 99 இடங்களையும் பெற்றது.

மோடி

இதற்கிடையில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, பா.ஜ.க கடந்த முறையைப் போல 303 இடங்கள் அல்லது அதற்கும் சற்று அதிகமான இடங்களைத் தனிப்பெரும்பான்மையைப் பெறும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். மேலும், கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான அன்று, `அடுத்த தேர்தலில் தேவையற்ற பேச்சுகளில் நேரத்தை வீணாக்காதீர்கள்’ என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தன்னுடைய கணிப்பு தவறிவிட்டதை ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர், மோடி மீது மக்களுக்கு கோபம் இருக்கிறது என முன்பே கூறியிருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். தனியார் ஊடகத்திடம் தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், “நானும் என்னைப் போன்ற கருத்துக்கணிப்பாளர்களும் தவறாகப் புரிந்து கொண்டோம். இனிவரும் தேர்தலில் இந்த எண்ணிக்கை விளையாட்டுகளில் வரமாட்டேன். என்னுடைய கணிப்பை நான் முன்வைத்தேன்.

பிரசாந்த் கிஷோர்

ஆனால், என்னுடைய கணிப்பு 20 சதவிகிதம் தவறாகிவிட்டது. இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். பா.ஜ.க 300-ஐ நெருங்கும் என்று கூறியிருந்தேன். ஆனால், அவர்கள் 240 தான் பெற்றார்கள். இருப்பினும், மோடி மீது மக்களுக்கு கோபம் இருக்கிறது, ஆனால் அது பரவலான அதிருப்தியாக இல்லை என்று முன்பே கூறியிருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் எண்ணிக்கை கணிப்புகளில் தவறு செய்திருக்கிறேன். அந்த எண்களை நீங்கள் நீக்கிவிட்டால் நான் கூறியது அனைத்தும் சரியாக இருக்கும் ” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88