8 ஏக்கர் நிலத்தை விற்று, பணத்துடன் பதுங்கிய மனைவி – வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன் அதிர்ச்சி!

சென்னை, ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு வீரபாண்டியன். இவர், கடந்த ஆண்டு அக்டோர் மாதம் 10-ம் தேதி வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், “எனக்கும் கெஜலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி கருத்து – வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்கிறோம். சேர்ந்து வாழ்ந்தபோது, வேலூர் மாவட்டத்தின் ஒருப் பகுதியில் இருவரின் பெயரிலும் 8 ஏக்கர் 11 சென்ட் நிலம் வாங்கினேன். பிரிந்த பிறகு நான் வெளிநாட்டில் வேலைக்குச் சென்றுவிட்டேன்.

கெஜலட்சுமி

இதனிடையே, போலியான வாழ்நாள் சான்றிதழை தயார் செய்த கெஜலட்சுமி, எனக்குத் தெரியாமல் அந்த 8 ஏக்கர் 11 சென்ட் சொத்தையும் வேறு ஒரு நபருக்கு விற்பனைச் செய்துவிட்டார். எனவே, மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று புகாரில் கூறியிருந்தார். இது தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்ததால் நிலம் விற்ற பணத்துடன் கெஜலட்சுமி தலைமறைவானார். போலீஸார் அவரைத் தேடி வந்த நிலையில், சென்னை சோளிங்கநல்லூர் பகுதியில் பதுங்கியிருந்தபோது நேற்றைய தினம் பிடிபட்டார். கெஜலட்சுமியை கைதுசெய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.