சேலம்: தவறான சிகிச்சையால் உயிரிழந்த பள்ளி மாணவன் – மெடிக்கல் கடை உரிமையாளர் கைது!

சேலம் மாவட்டம், ஆத்தூர் முல்லைவாடி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் கீர்த்திவாசன், அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மார்ச் மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்ட கீர்த்திவாசனுக்கு அப்பகுதியில் உள்ள மெடிக்கல் கடையில் மருந்து, மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளனர். மெடிக்கல் கடை நடத்தி வரும் செந்தில்குமார் மார்ச் 21-ம் தேதி கீர்த்திவாசனுக்கு ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் வழங்கியுள்ளார். ஆனால், மீண்டும் மாணவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கீர்த்திவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

கைது

இது குறித்து ஆத்தூர் போலீஸார் சந்தேகம் மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்திருந்தனர். இது பற்றி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் தவறாக ஊசி மருந்து செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டு மாணவன் இறந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக மெடிக்கல் கடை உரிமையாளர் செந்தில்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தவறுதலாக ஊசி மருந்து செலுத்தியதால் மரணம் நிகழ்ந்ததாக வழக்கு மாற்றம் செய்யப்பட்டு உயிரிழப்பிற்கு காரணமான செந்தில்குமாரை நேற்று மாலை போலீஸார் கைது செய்தனர்.