காலை வாரிய அருப்புக்கோட்டை; கை கட்சிக்குக் கைகொடுத்த சிவகாசி; மாணிக்கம் தாகூர் கரை சேர்ந்தது எப்படி?

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவின்படி சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூரே மூன்றாம் முறையாக வெற்றி பெற்றார். தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன்‌ குறைவான‌ வாக்கு வித்தியாசத்தில் (4,379 வாக்குகள்) வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டார். விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி மற்றும் மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் திருப்பரங்குன்றம் ஆகிய ஆறு தொகுதிகளை உள்ளடக்கிய விருதுநகர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் வெற்றிக்கு சிவகாசி தொகுதியே பெரிதும் கை கொடுத்திருக்கிறது.

தமிழக வருவாய்துறை அமைச்சரும், தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆரின் சொந்த தொகுதியான அருப்புக்கோட்டை, தேர்தல் முடிவில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் காலை வாரியிருக்கிறது. அதன்படி, வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலிருந்து முன்னிலை வகித்துவந்த தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு திருமங்கலம், அருப்புக்கோட்டை தொகுதிகளில் மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். குறிப்பாக, அருப்புக்கோட்டை தொகுதியில் மட்டும் விஜய பிரபாகர் 61,659 வாக்குகளும், மாணிக்கம் தாகூர் 49,381 வாக்குகளும் பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்ற தொகுதிகளில் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் அருப்புக்கோட்டை தொகுதியில் பெற்ற வாக்குகள்தான் மிகக் குறைவு.

பிரசாரம்

மாணிக்கம் தாகூருக்கு அதிகபட்சமாக திருப்பரங்குன்றத்தில் 77,119 வாக்குகளும், விஜய பிரபாகரனுக்கு திருமங்கலம் தொகுதியில் 79,591 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. மற்ற இடங்களான விருதுநகர், சாத்தூர் தொகுதிகளில் மாணிக்கம் தாகூருக்கும், விஜய பிரபாகருக்கும் சில ஆயிரம் வாக்குகளே வித்தியாசப்பட்டுள்ளது. முக்கியமாக மாணிக்கம் தாகூரின் வெற்றிக்கான வாக்குகளை சிவகாசி தொகுதி வாரி வழங்கியுள்ளது. சிவகாசி தொகுதியில் பதிவான வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், விஜய பிரபாகரனை விட 13,850 வாக்குகள் அதிகம் பெற்றது திருப்புமுனையாக அமைந்தது. அதன்படி, வேட்பாளர்கள் மாணிக்கம் தாகூர், விஜய பிரபாகரன் ஆகியோர் சட்டமன்றத் தொகுதி வாரியாக பெற்ற வாக்கு விபரங்கள் வருமாறு:

விஜயபிரபாகர்

மாணிக்கம் தாகூர் – (காங்கிரஸ்)

திருப்பரங்குன்றம்- 77,119

திருமங்கலம்- 69,587

சாத்தூர்- 65,052

சிவகாசி- 67,086

விருதுநகர்- 54,651

அருப்புக்கோட்டை- 49,381

விஜய பிரபாகர்- (தே‌.மு.தி.க)

திருப்பரங்குன்றம்- 71,664

திருமங்கலம்- 79,591

சாத்தூர்- 59,238

சிவகாசி- 53,236

விருதுநகர்-52,855

அருப்புக்கோட்டை- 61,659

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் வேறெந்த தொகுதியிலும் அல்லாமல், சிவகாசி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 14,000 வாக்குகள் அதிகம் கிடைத்திருப்பது குறித்து, அரசியல் ஆர்வலர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், “தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு விருதுநகர் மக்களவைத் தொகுதி முழுவதும் நல்ல வரவேற்பு இருந்ததை அ.தி.மு.க கூட்டணி நன்கு அறியும். ஆகவே, இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்ற மெத்தன நினைப்பு அ.தி.மு.க-வினருக்கு ஏற்பட்டிருக்கலாம். குறிப்பாக சிவகாசி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் பதிவானதற்கு அ.தி.மு.க-வின் அலட்சிய செயல்பாடு ஒரு காரணமாக கருதப்படுகிறது. ஏனெனில் தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க-வில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகிகள் மாற்றம், கட்சியினர் அனைவரும் விரும்பும் வகையில் இல்லை.

பிரசாரம்

சிவகாசி தொகுதியில் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கே.டி. ராஜேந்திர பாலாஜி, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர் உள்ளடக்கிய மேற்கு மாவட்டத்தை அ.தி.மு.க-வின் கோட்டையாக மாற்றியிருந்தார். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், தற்போது நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தலிலும் சிவகாசி தொகுதியில் அ.தி.மு.க பெற்றுள்ள வாக்குகளை பார்க்கும்போது கட்சிக்கான வாக்குகள்கூட சிதறியிருப்பதாக தோன்றுகிறது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb