கடந்த 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை (None Of The Above ‘NOTA’) நோட்டாவை சேர்த்தது. நோட்டா என்பது வாக்காளர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்யவும், வாக்களிக்க விரும்பம் இல்லாதவர்களின் வாக்குகள் கள்ள வாக்குகளாக பதிவாகிவிடக் கூடாது என்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் 2013 ஏற்காடு இடைத்தேர்தலின்போது நோட்டா சேர்க்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2014 மக்களவைத் தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களும் நோட்டா இடம் பெற்றுவருகிறது.
தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் நோட்டாவுக்குப் பதிவானால், புதிய வேட்பாளர்களைக் கொண்டு மறுதேர்தல் நடத்தவேண்டும். அந்த வேட்பாளர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடத் தடைவிதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் நோட்டாவுக்கு 0.99 சதவிகிதம் வாக்குகள் கிடைத்திருக்கிறது (சுமார் 4.5 லட்சம் வாக்குகள்) . நோட்டா குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாதபோதிலும், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 26,450 வாக்குகுள் நோட்டாவுக்கு விழுந்திருக்கின்றன. இதையடுத்து திண்டுக்கல் தொகுதியில் 22,120 வாக்குள் நோட்டாவுக்கு விழுந்திருக்கின்றன. இதேபோல குறைந்தபட்சமாக கன்னியாகுமரி தொகுதியில் 3,756 வாக்குகளும், ராமநாதபுரம் தொகுதியில் 6,295 வாக்குகளும் நோட்டாவுக்கு விழுந்திருக்கின்றன.
ஒவ்வொரு தேர்தலின்போதும் நகர் பகுதிகளில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்த நிலையில், தென்தமிழகத்தில் திண்டுக்கல் போன்ற வளரும் நகரில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தனா பாலாஜி, “தேர்தலில் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும. அனைத்து வாக்காளர்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் நோட்டா கொண்டுவரப்பட்டது. டிஜிட்டல் யுகத்தில் நோட்டா குறித்த விழிப்புணர்வு எல்லா தரப்பு மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அதனால் கிராமப்புறங்களில்கூட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுகிறது.
மேலும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைப்பது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்மீதான நம்பிக்கையின்மையைத்தான் காட்டுகிறது. எனவே அரசியலில் இருப்போர், மக்கள் சேவையாற்ற வருவோர் ஊழலின்றி, சேவை நோக்கோடு இருந்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு நோட்டா முக்கிய காரணமாகியுள்ளது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb