சேலம்: எடப்பாடி கோட்டையை செல்வகணபதி தகர்த்தது எப்படி?!

சேலம்  நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு சேலம் வடக்கு, மேற்கு, தெற்கு, வீரபாண்டி, எடப்பாடி, ஓமலூர் என 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில், ‘சேலம் வடக்கு தொகுதியை மட்டும்தான் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கைப்பற்றியது. மீதமுள்ள 5 தொகுதிகளிலும் அதிமுக-வே வெற்றி கண்டது. அதனாலேயே ‘சேலம்  என்றுமே அதிமுகவின் கோட்டை… எந்த கொம்பனாலும் இதனை அசைத்துப் பார்க்க முடியாது” என மார்தட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்தநிலையில், ‘சேலம் நாடாளுமன்றத் தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் களமாடிவந்த மாவட்ட தி.மு.க-வினர், எதிர்க்கட்சி தலைவரின் கோட்டையான ‘எடப்பாடி’ சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குவித்தியாசம் காட்டுவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டினர். பதிலடியாக அ.தி.மு.க தரப்பிலோ, ‘2021-ல் விடுபட்டுப்போன சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் இம்முறை அதிக வாக்குகள் பெற வேண்டும்’ என்ற முனைப்போடு பணியாற்றி வந்தனர்.

உதயநிதி ஸ்டாலின் – டி.எம் செல்வகணபதி

ஆனால் இருதரப்புக்கும் பெரும் சவாலாக தான் இரண்டு தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் இருந்தன. காரணம், கிட்டத்தட்ட எடப்பாடி தொகுதியை திமுக அசைத்தும் பார்க்க முடியாத நிலைதான். அதேபோல தான் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியை அதிமுக தகர்க்கமுடியாத நிலையுமாக தேர்தல் முடிவுகள் இருந்தது.

சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையிலும் வேட்பாளர்கள் முகம் என்பது மக்களிடையே கூடுதல் வாக்குகளை பெருவதற்கான காரணமாக இருந்து வந்தது. அந்தவகையில் திமுக சார்பில் களமிறக்கப்பட்ட டி.எம் செல்வகணபதி ஆரம்ப காலக்கட்ட அரசியல் பயணம் அதிமுக-வில் தொடங்கி பின்னர் திமுக-வுக்குள் ஐக்கியமானதால், தொகுதிக்குள் நல்ல பரீட்சையமான நபராக இருந்து வருகிறார்.

மேலும் திமுக இளைஞரணி மாநாட்டை சேலத்தில் நடத்தி, சேலம் திமுகவை முன்னரே தயார் செய்து வைத்திருந்தார்கள்.

அதே நேரத்தில் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள விக்னேஷ், இளைஞர், பசையுள்ள பார்டியாக இருந்தாலும், தொகுதிக்குள் பரீட்சையமான நபராக இல்லை. இதனால் செல்வகணபதிக்கு அதிமுகவை சேர்ந்த ஓட்டுக்கள் பிரிந்து வருவதற்கு வாய்ப்பு இருந்து வந்தது.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

மற்றொருபுறம் பாஜக கூட்டணியில், பாமக சார்பில் களமிறக்கப்பட்ட அண்ணாதுரை சமூக ஓட்டுகளை நம்பி இருந்தார். ஆனால், தொகுதிக்குள் போட்டியிடக்கூடிய 2 கட்சி வேட்பாளர்களும் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், இந்த தொகுதி பாமக வேட்பாளர் அண்ணாதுரைக்கு கைக்கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் திமுக வேட்பாளர் செல்வகணபதி 5,66,083 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் விக்னேஷை 70,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88