`தேர்தல் செலவு ரூ.27,000′ சிறையிலிருந்தே போட்டியிட்ட தந்தை; பிரசாரம் செய்து வெற்றிபெற வைத்த மகன்கள்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளுக்கு, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில், போட்டியிட்ட ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு எதிராக, UAPA வழக்கில் 2019-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இன்ஜினீயர் ரஷீத் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தல் முடிவில், சிறையில் இருந்தவாறே பாரமுல்லா தொகுதியை 2,04,142 வாக்குகள் வித்தியாசத்தில் இன்ஜினீயர் ரஷீத் கைப்பற்றியிருக்கிறார்.

இன்ஜினீயர் ரஷீத்

வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போதே உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “தவிர்க்க முடியாத ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். வடக்கு காஷ்மீரில் வெற்றி பெற்ற இன்ஜினீயர் ரஷீத்துக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார். இந்த தேர்தல் பிரசாரத்துக்கு இன்ஜினீயர் ரஷீத்தின் இரண்டு மகன்களான அப்ரார் ரஷீத், அஸ்ரர் ரஷீத் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர். தேர்தல் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அப்ரார் ரஷித் (22), “இது மக்களின் தீர்ப்பு.

வாக்காளர்கள் வாக்கின் மூலம் பேசுகிறார்கள், ஜனநாயகத்தில் இதுதான் முக்கியம். என் தந்தையின் வெற்றி அவரை சிறையில் இருந்து விடுவிக்கும் என்று நம்பவில்லை. ஆனால், வடக்கு காஷ்மீர் மக்களுக்கு அவர்களுக்கான உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்த ஜனநாயகம் முக்கியம். என் தந்தைக்கு கிடைத்த இந்த மக்களின் ஆதரவு அவர் குற்றமற்றவர் என்பதற்கு சான்றாகும், மேலும் அவர் தனது மக்களை பிரதிநிதித்துவப்படுத்த உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

அப்ரார் ரஷீத்

ஆரம்பத்தில் என் தந்தை பாரமுல்லா தொகுதி பிரசாரத்துக்கு எனது பெயரை பரிந்துரைத்தபோது, எனக்கு ஆதரவாக ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். இருப்பினும், படிப்படியாக ஆயிரக்கணக்கானோர் என் தந்தைக்குப் பின்னால் திரண்டனர், சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ஒரு பெரிய மக்கள் அலை உருவானது. இந்த தேர்தலில் எனது வாகனத்திற்கான எரிபொருளுக்காக ரூ.27,000 செலவிட்டேன். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பிரசாரத்திற்கு பங்களித்தனர். தற்போது மகத்தான வெற்றியை உறுதி செய்திருக்கின்றனர்.” எனத் தெரிவித்திருக்கிறார்.