`நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது…’ – சொல்கிறார் ஓ.பி.எஸ்

“அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற ஒரே இயக்கமாக அதிமுக உரிமை மீட்பு அணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது…” என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்

மதுரை வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்காக நடைபெற்றுள்ளது. பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதற்கு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது” என்றவரிடம்…

“பாஜக கூட்டணியில் உங்களுக்கான பலன் கிடைக்குமா?” என்றதற்கு,

“என்னை பொறுத்தவரை பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் அல்ல, கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன். என்னுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது…” என்றார்.

மோடி ஓபிஎஸ்

“உங்களை மத்திய அமைச்சராக பார்க்கலாமா?” என்றதற்கு,

“நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது…” என்றவர், “இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில் நாட்டு நடப்புகளை, அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற ஒரே இயக்கமாக அதிமுக உரிமை மீட்பு அணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் நடப்புகளை மிகத் துல்லியமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், யாரால் எப்படி இந்தக் கட்சி சின்னாபின்னமாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும், அது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு மக்களுக்கு தெரியும்..” என்றார்.