`அரசு ஊழியரின் ஊழல் குற்றத்தில் மனைவிக்கும் பங்குண்டு..!’ – சென்னை உயர் நீதிமன்றம்

காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சக்திவேல். இவர் தனது பதவிக்காலத்தில் (ஜன. 1, 1992 முதல் டிச. 31, 1996 வரை) வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.77 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக உறுதி செய்யப்பட்டு, திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால், அவர்மீதும், அவரது மனைவி தெய்வநாயகி மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 2017 முதல் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு நிலுவையில், இருக்கும்போதே சக்திவேல் உயிரிழந்தார்.

ஊழல்

இருப்பினும், சக்திவேலின் மனைவியான தெய்வநாயகி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததால் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த விசாரணை நீதிமன்றம், சக்திவேல் உயிரிழந்து விட்டதால், அவரது குற்றத்தில் மனைவிக்கும் பங்குண்டு எனத் தெரிவித்து, தெய்வநாயகிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, தெய்வநாயகி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், தெய்வநாயகியின் கோரிக்கையை ஏற்க மறுத்து, “ எஸ்.ஐ. சக்திவேல் விசாரணையின் போதே இறந்துவிட்டதால், அவரது மனைவியான தெய்நாயகி குற்றவாளி. தனது கணவர் லஞ்சம் பெறுவதைத் தடுப்பது ஒரு அரசு ஊழியரின் மனைவியின் கடமை. தெய்வநாயகி அந்தக் கடமையை செய்யத் தவறி விட்டார். வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவமே லஞ்சத்திலிருந்து விலகி இருப்பதுதான்.

மதுரை உயர் நீதிமன்றம்

தவறாக சம்பாதித்த பணத்தை குடும்பத்தினர் அனுபவித்திருந்தால், அவர்களும் அதற்குண்டான பாதிப்புகளை அனுபவித்துதான் ஆகவேண்டும். இந்த நாட்டில் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு ஊழல் பரவலாகி விட்டது. ஊழல் வீட்டிலிருந்தே தொடங்குகிறது. வீட்டில் உள்ளவர்களே ஊழலுக்கு ஒரு காரணமாக இருந்தால், ஊழலுக்கு முடிவே இருக்காது. உயிரிழந்த எஸ்.ஐ. சக்திவேல், ஊழல் செய்து ஈட்டிய பணத்தில், அவரது மனைவியான தெய்வநாயகியும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பதால், அதன் விளைவுகளை, அதாவது சிறைத் தண்டனையை அவர் எதிர்கொள்ளத்தான் வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தெய்வநாயகியின் வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், “எஸ்.ஐ. சக்திவேலின் வருமானத்தை விட, அவரது சொத்துகள் அதிகம் என்பதை நிரூபிக்கும் காரணிகளை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை” என வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், “விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதுதான் அதில் தலையிட விரும்பவில்லை” எனக் கூறி, தெய்வநாயகியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, ஓராண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb