Prakash Raj: `நான் தமிழனா இல்லையா என மக்களிடம் கேளுங்கள்..!’ – எல்.முருகனுக்கு பிரகாஷ் ராஜ் பதில்!

ஜவஹர்லால் நேருவின் 60-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, `ஜவஹர்லால் நேருவின் தேசியக் கொள்கைகள்’ என்ற தலைப்பில், புதுச்சேரியில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், எம்.எல்.ஏ ஷாநவாஸ், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், “நாட்டின் முதல் பிரதமரைப் பற்றி இங்கு நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

பிரகாஷ் ராஜ்

ஆனால் இன்றைய பிரதமர் மோடி, தான் 1,000 ஆண்டுகள் வாழும் பிரதமர் என்று நினைத்து தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார். ஜவஹர்லால் நேருவின் கொள்கைகளைப் பற்றி பேச வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. கல்வி, தொழில் நிறுவனங்கள், அறிவியல் இவைதான் இந்தியாவுக்கு முக்கியம் என்றார் நேரு. ஆனால் இப்போதிருக்கும் தெய்வமகன் (பிரதமர்) படைத்த கடவுளுக்கே வீடு கட்டி, அதற்காக ஓட்டு போடுங்கள் என்று கேட்கிறார். நாட்டின் சரித்திரம் மிகவும் பெரியது. யாராலும் அதை அழிக்க முடியாது.

கர்நாடகத்தைச் சேர்ந்த நான், தமிழர்களைப் பற்றி பேசக் கூடாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுவது சரியல்ல. பிரகாஷ் ராஜ் தமிழனா இல்லையா என்று என்னைச் செல்லமாக ஏற்றுக்கொண்ட மக்களை கேளுங்கள். நான் கர்நாடகாக்காரன்தான். அதேசமயம் நான் இந்தியன். பல மொழிகளில் என்னை வரவேற்கின்றனர். நான் அருமையாக தமிழ் பேசுவதே தமிழை மதிப்பதால்தான். தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு பெற்றதில், மிகப்பெரிய வரலாற்றுப் போராட்டம் அடங்கியுள்ளது.

பிரகாஷ்ராஜ்

அதன்படி அண்ணா 41 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். கருணாநிதி முதல்வரானதும் அது 49 சதவிகிதமானது. அதன்பின் எம்.ஜி.ஆர். முதல்வரானதும் 68 சதவிகிதமாக உயர்த்தினார். பின்னர் மீண்டும் கருணாநிதி முதல்வரானதும் 69 சதவிகிதமாக்கினார். அதை மத்திய அரசு 50 சதவிகிதமாக்க முயன்றது. ஆனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா நீதிமன்றம் சென்று அதை தடுத்து நிறுத்தி வெற்றி பெற்றார். மறைந்த முதல்வர் கருணாநிதி சம்பந்தப்பட்ட விழா என்பதால் அவரை நினைவு கூர்ந்து பேசினேன்.

ஆனால், ஜெயலலிதாவை குறைத்துப் பேசவில்லை. அதில் அனைவரது பங்கும் உள்ளது என்பதை அ.தி.மு.க-வினர் புரிந்து கொள்வது அவசியம். தீபம் எரிவதை விட, அதை ஏற்றியது உயர்ந்தது. தமிழகத்தில் கோயிலுக்கு செல்லும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் அந்த மக்கள் அரசியலில் ஆன்மிகத்தை எடுத்து வரவில்லை என்பதை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும். காவிரி பிரச்னையை அரசியலாக்குவது சரியல்ல. காவிரி ஆறு தொடங்கும் இடத்திலிருந்து, முடியும் வரையில் மரங்கள் அழிப்பு, ஆக்கிரமிப்பு, மணல் எடுப்பது என பல பிரச்னைகள் உள்ளன.

கூட்டத்தின் ஒரு பகுதி

அதனால் ஆற்று நீர் குறைந்துவிட்டது. ஆகவே கர்நாடக, தமிழக அரசுகளை இணைத்து அறிவியலாளர்களின் ஆலோசனையுடன் மத்திய அரசு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அதனை விடுத்து தமிழனா, கர்நாடகனா என்று பேச வேண்டாம். மொழிக்கும், தண்ணீருக்கும் என்ன தொடர்பு? காவிரி பிரச்னை வந்தால் எந்த எம்.பி-யும், எம்.எல்.ஏ.க்களும் பாதிக்கப்படுவதில்லை. அவர்களின் கார் கண்ணாடிகள் உடைக்கப்படுவதில்லை. அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்களை பாதிக்கும் வகையில்தான் அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர். காவிரி பிரச்னையை அறிவியல் பூர்வமாக தீர்ப்பதை விடுத்து பிரதமர் தியானம் செய்கிறார். பிறர் பாக்கெட்டில் இருந்து பணம் எடுப்பதால் காந்தி பற்றி மோடிக்கு தெரியவில்லை. தனது பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து செலவு செய்தால் காந்தியைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கும். எனக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. நான் மக்களோடு இருக்கின்றேன். அரசியல் தற்போது தொழிலாக மாறிவிட்டது. அற்புதமான எதிர்காலம் கண்களுக்குத் தெரிகிறது.

பிரகாஷ் ராஜ்

ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து. நம் நாடு வெவ்வேறு கலாசாரங்களைக் கொண்டிருக்கிறது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இந்தியா கூட்டணியில் திறமை மிக்கவர்கள் இணைந்திருக்கின்றனர். வரும் ஆட்சியில் நல்லது நடக்கும். நாட்டில் சர்வாதிகாரம் இனி நடக்காது. அதிகாரம் யாரிடம் இருந்தாலும் ஆபத்துதான். மக்களாகிய நாம் எப்போதும் எதிர்கட்சியாகவே இருப்போம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb