`வெற்றியின் முகட்டில் இந்தியா கூட்டணி… பாசிச பாஜக வீழட்டும்!’ – முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

நாடாளுமன்றத் தேர்தலின் பிரசாரம் ஓய்ந்து இன்று ஏழாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தொடர்ந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாளை அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடையவிருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை, தேர்தலுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்தது. `இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நான் பங்கேற்க இயலாது ‘என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், தனது கட்சி சார்பில் பிரதிநிதி ஒருவர் பங்கேற்பார் எனக் கூறியிருந்தார்.

இந்தியா கூட்டணி

அதேபோல இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்வார் என கூறப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என நேற்று தகவல் வெளியானது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “பா.ஜ.க-வின் பத்தண்டுக்கால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது.

தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வு-க்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது. தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாள்களே உள்ளன.

ஸ்டாலின்

வாக்கு எண்ணிக்கையின்போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் – நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.