சமீபத்தில் இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி நடித்து வெளியான படம் லவ்வர். கலவையான விமர்சனங்களை பெற்ற படத்தில், மணிகண்டன் போல ஒரு பெண் இருந்தால் எப்படி இருக்குமோ, அதுபோல காதலனுக்கு தொல்லை கொடுத்த சீனா பெண் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறார்.
இது தொடர்பாக தி சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியில்,“சீனாவை சேர்ந்த 18 வயது பெண் சியாயு (Xiaoyu). பல்கலை கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது ஒருவரை காதலிக்கத் தொடங்கியிருக்கிறார். இவர்களின் காதல் ஆழமாக சென்றபோது, அந்த காதல் ஒருகட்டத்தில் தொல்லையாக மாறியிருக்கிறது. அவர் தனது காதலனை அதிகமாகச் சார்ந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து “எங்க இருக்க… என்ன பண்ற… இப்போ யார் கூட இருக்க…” என்பது போன்ற கேள்விகளுடன் ஒரு நாளுக்கு குறைந்தது 100 முறை தொலைபேசியில் அழைத்து விசாரிப்பாராம். இந்த நடத்தை காதல் உறவில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கறது. இதனால் காதலன் திணற ஆரம்பித்திருக்கிறார். ஒருவேளை காதலன் செல்போன் அழைப்பை ஏற்கவில்லையென்றால், மிகவும், ஆத்திரப்பட்டு, வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.
மேலும், பால்கனியில் இருந்து குதிக்கப் போவதாகவும், கழுத்தை அறுத்துக்கொள்ளப் போவதாகவும் மிரட்ட தொடங்ககியிருகிறார். இதனால் நொந்துபோன காதலன் இறுதியில் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்திருக்கிறார். காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக பேசிய மருத்துவர் Du Na,“காதல் உறவுகளில் இந்த வகையான வெறித்தனமான நடத்தையை விவரிக்க “love brain” (காதல் மூளை)” என்பது பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது.
இது மருத்துவச் சொல் அல்ல. அவரது எல்லைக்குட்பட்ட இதுபோன்ற ஆளுமைக் கோளாறு, சில நேரங்களில் கவலை, மனச்சோர்வு போன்ற பிற நிலைமைகளுடன் இணைந்து ஏற்படலாம். இத்தகைய நிலைமைகள் ஆரோக்கியமற்ற குழந்தைப் பருவத்தாலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக குழந்தை பருவத்தில் பெற்றோருடன் ஆரோக்கியமான உறவைக் கொண்டிருக்காதவர்களிடம் இது அடிக்கடி நிகழ்கிறது. எனவே, இது போன்ற கடுமையாக நடந்துகொள்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவை” என வலியுறுத்தியிருக்கிறார்.