ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ‘நாட்டின் செல்வத்தில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் அதிகாரம் உண்டு’ என்று சொன்னார்கள். ‘தேசத்தின் செல்வத்தை ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்’ என்பதுதான் அதன் பொருள். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை ஊடுருவல்காரர்களுக்குத் தரப்போகிறீர்களா?” எனப் பேசியது சர்ச்சையானது.
அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்துவருகின்றன. ஆனால், தற்போது பிரதமர் மோடியைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அதேபோன்ற பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரித்துவரும் யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது,“காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டு, மீண்டும் ஒரு முறை பொய்யான அறிக்கையுடன் உங்களிடம் வந்துள்ளனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ‘வியாக்திகாட் கானூன்’ (தனிப்பட்ட சட்டங்கள்) அமல்படுத்துவோம் என்று கூறுகிறார்கள். அதாவது மோடி தடை செய்த முத்தலாக் சட்டமான ஷரியா சட்டம் அமல்படுத்தப்படும். ஆம், அதைத் தொடர்ந்து ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள். இந்த நாடு அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தால் நடத்தப்படவேண்டுமா? அல்லது ஷரியத் சட்டம் மூலம் நடத்தப்படவேண்டுமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்? காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மக்களின் சொத்துக்களை எடுத்து பங்கிடுவோம் என்று கூறுகிறது.
அதாவது உங்கள் சொத்துக்களை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் சூறையாட அனுமதிக்க விரும்புகிறீர்களா… இந்த வெட்கமற்றவர்கள், ஒருபுறம் உங்கள் சொத்துக்களில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள், மறுபுறம் மாஃபியாக்களையும், குற்றவாளிகளையும் தங்கள் ஆதரித்து அவர்கள் பெயரில் ஃபாத்திஹா ஓதுகிறார்கள். டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று கூறியிருந்தார். அப்படியானால் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள், விவசாயிகள், பெண்கள் எங்கே போவார்கள்?
10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் பயங்கரமான சூழல் இருந்தது. 2014-க்குப் பிறகு, பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டது. 2019-க்குள், பயங்கரவாதத்தின் ஆணிவேரான ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவை நீக்கும் வகையில் மோடி சட்டம் இயற்றி, இன்று பயங்கரவாதம் இந்தியாவிலிருந்து அழிக்கப்பட்டிருக்கிறது. தவறுதலாக, இந்தியாவில் பயங்கரவாத சம்பவம் நடந்து, சில அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டாலும், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் அஞ்சுகிறது. இப்போது பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டால்கூட இதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என பாகிஸ்தான் அச்சப்பட்டு தெளிவுபடுத்துகிறது.
பாட்டி (இந்திரா காந்தி) சொன்ன வறுமை ஒழிப்பு முழக்கத்தை இப்போது பேரன் (ராகுல் காந்தி) கிளி போல் மீண்டும் சொல்கிறார்கள். காங்கிரஸுக்கு வறுமை ஒழிப்பு குறித்த எந்தப் பார்வையும் இல்லை. ஆனால், பிரதமர் மோடி உண்மையிலேயே வறுமையை ஒழித்திருக்கிறார். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் உரிமைகள் மீண்டும் கொள்ளையடிக்கப்படும். இதுமட்டுமின்றி, பெண்களும், தொழிலதிபர்களும் மீண்டும் பாதுகாப்பற்றவர்களாக இருப்பார்கள். பயங்கரவாதம், மாஃபியா ஆட்சி மீண்டும் வரும்” என வெளிப்படையாக பேசி இருக்கிறார்
கடந்த 2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, யோகி ஆதித்ய நாத்,“இந்தத் தேர்தல் 80 சதவிகிதத்துக்கும், 20 சதவிகிதத்துக்கும் நடக்கும் போட்டி” என வெளிப்படையாக பேசியதும் சர்ச்சையானது. ஆனால், காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளில் ஷரியா சட்டம் குறித்து எந்த வாக்குறுதிகளும் இல்லை என்பதும், மன்மோகன் சிங் கூறியதாக குறிப்பிட்ட செய்திகளும் உண்மை இல்லை என்ற தகவல்களும் வெளியாகிவிட்டது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs