தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரான முரசொலி, தொகுதி முழுவதும் உள்ள முக்கிய தி.மு.க நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று அதிராம்பட்டினம் நகராட்சியில் கிழக்கு நகரச் செயலாளரான இராம.குணசேகரன் அலுவலகத்திற்கு சென்று இராம.குணசேகரன் உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது இராம.குணசேகரன் ஆதரவாளர்கள் சிலர், `அதிராம்பட்டினம் நகரத்திற்கு வாக்கு கேட்டு வரும் போது பட்டுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏவும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளருமான அண்ணாதுரையை உடன் அழைத்து வராதீர்கள்… ப்ளீஸ்” என்று சொன்ன சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தி.மு.க வட்டத்தில் பேசினோம், “தஞ்சாவூர் தொகுதி தி.மு.க வேட்பாளராக முரசொலி அறிவிக்கப்பட்டதும், அவர் தொகுதி முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு திரட்டி, அவர்களிடம் வாழ்த்து பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் நகராட்சிக்கு முரசொலி சென்றார்.
அதிராம்பட்டினம் நகரச்செயலாளராக இராம.குணசேகரன் இருந்து வந்த நிலையில்,மாவட்டச் செயலாளரான அண்ணாதுரை கடந்த மாதம் நகரத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்து தன்னுடைய ஆதரவாளரான அஸ்லாம் என்பவரை மேற்கு நகரச்செயலாளர் ஆக்கினார். குணசேகரனை கிழக்கு நகரச்செயலாளர் ஆக்கினார். தி.மு.கவில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை என எங்கும் நகரத்தை பிரித்து பொறுப்பு வழங்காத நிலையில் அண்ணாதுரை மட்டும் , குணசேகரன் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியில் திட்டமிட்டு அதிராம்பட்டினம் நகரத்தை இரண்டாக பிரித்து விட்டார் என குணசேகரன் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்த வேட்பாளர் முரசொலியிடம், குணசேகரன் ஆதரவாளர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அப்போது சிலர், `எல்லோர் சார்பாகவும் சொல்கிறோம், உங்களை கையெடுத்து கும்பிடுகிறோம் இரண்டாக பிரிக்கப்பட்ட நகரத்தை மீண்டும் ஒன்றாக மாற்ற வேண்டும் அதற்கான நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும்.
அதிராம்பட்டினம் நகரத்திற்கு நீங்கள் வாக்கு கேட்டு வரும் போது அந்த வாகனத்தில் அண்ணாதுரையை அழைத்து வராதீர்கள்’ எனவும் கூறினர். இதைகேட்ட முரசொலிக்கு என்ன சொல்வது தெரியாமல் தவித்தார். இந்த சம்பவம் தி.மு.கவில் இருக்கும் கோஷ்டி பூசலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. இதை புதியவரான முரசொலி எப்படி சமாளிக்க போகிறார் என்று தான் தெரியவில்லை என அவரது ஆதரவாளர்கள் தரப்பில் புலம்பி வருகின்றனர்.
தி.மு.க தலைமை இதில் உரிய கவனம் செலுத்தி பஞ்சாயத்தை தீர்த்து வைத்தால் தான் பிரசரத்தின் போது இது போன்ற சலசலப்புகள் நடக்காமல் தடுக்கலாம்” என்றனர்.
இது குறித்து இராம.குணசேகரனிடம் பேசினோம், “நகரத்தை இரண்டாக பிரித்தது தொடர்பான வருத்தத்தை கட்சியினர் பதிவு செய்தனர். மற்றபடி ஒன்றும் இல்லை” என முடித்துக் கொண்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY