மார்ச் 22-ம் தேதி சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையேயானப் போட்டி நடைபெறவிருக்கிறது.
இது தோனிக்குக் கடைசி சீசன் எனவும் சொல்லப்படுகிறது. அதேபோல, விராட் கோலி சில மாதங்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் இரு ஜாம்பவான்கள் மோதிக்கொள்ளும் போட்டி என்பதால் இரு அணி ரசிகர்களும் உற்சாகத்துடன் போட்டியைக் காணக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு ப்ளெஸ்ஸி, தோனி குறித்தும் RCB vs CSK மேட்ச் குறித்தும் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “எப்போதுமே தோனி ஒரு மிகச் சிறந்த கேப்டன்தான். அவருடன் சில ஆண்டுகள் ஒன்றாகப் பழகியிருக்கிறேன். அது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவரின் கேப்டன்சியில் விளையாடியதில் நிறையவே கற்றுக் கொண்டேன். குறிப்பாக, ஒரு கேப்டனாக எப்படி இருக்க வேண்டும் என்பதை தோனியிடமிருந்தும், ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடமிருந்தும்தான் கற்றுக் கொண்டேன்.
அதுதான் இன்று நான் கேப்டனாக இருக்க உதவியாக இருக்கிறது. அதனால் நான் தோனிக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். தோனி என் உடன் பிறந்த அண்ணன் மாதிரி. ஒருபக்கம் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அவர் தோற்கக்கூடாது என்ற எண்ணமும் எனக்கு இருக்கிறது. அந்த அளவிற்கு அவர்மேல் எனக்கு மரியாதை இருக்கிறது. இருப்பினும் களமென்றால் அது போட்டிதான். அந்த வகையில் RCB vs CSK மேட்ச் தரமாக இருக்கும்.
CSK அணிக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதற்குக் காரணம் தோனி. அதேபோல, RCB அணிக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதற்குக் காரணம் விராட் கோலி. இருவருடனும் பழகுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. எனவே, நான் மிகவும் அதிர்ஷ்டசாலி!” என்று நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.