நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் `குண்டூர் காரம்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருந்தது.
இதன் பிறகு நடிகர் மகேஷ் பாபுவும் இயக்குநர் ராஜமெளலியும் இணையப்போகிறார்கள் என்ற செய்தி ஏற்கெனவே பேசப்பட்டு வந்தது. இந்தப் படத்திற்கான பணிகளை ராஜமெளலி மேற்கொண்டு வருகிறார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இது குறித்து ராஜமெளலியே விழா ஒன்றில் பேசியிருக்கிறார்.
ராஜமெளலி இயக்கத்தில் கடைசியாக ‘RRR’ திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் பேன் இந்தியத் திரைப்படமாக வெளியாகி அதிரடியான வரவேற்பைப் பெற்றது. இதன் பிறகு இயக்குநர் ராஜமெளலி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கப்போகிறார் எனப் பேசப்பட்டு வந்தது. இப்படம் ஆப்பிரிக்கா காடுகளை மையப்படுத்திய கதைக்களம் என்றும் ராஜமெளலியும் அவரின் தந்தை விஜயேந்திர பிரசாத்தும் இப்படத்தின் திரைக்கதை பணியில் வேலைப் பார்த்து வருகிறார்கள் என்றும் கூறப்பட்டது. தற்போது இந்தத் திரைப்படம் குறித்து இயக்குநர் ராஜமெளலி ஜப்பானில் நடந்த விழா ஒன்றில் பேசியிருக்கிறார்.
அவர், “நான் என்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டேன். அந்தப் படத்திற்கான எழுத்துப் பணிகள் முடிந்துவிட்டன. இப்போது முதற்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்ற முடிவு இன்னும் இறுதியாகவில்லை. இப்போதுவரை படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறவர் மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறார். மகேஷ் பாபு இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பலருக்கும் தெரிந்த மிகவும் திறமையான நடிகர் அவர். கூடிய விரைவில் இப்படத்தை முடித்துவிட்டு உங்களிடம் எடுத்து வருகிறேன்” என்றார்.
இதன் மூலம் நடிகர் மகேஷ் பாபு தனது 29வது படத்திற்கு ராஜமெளலியுடன் இணைகிறார் என்ற தகவல் உறுதியாகி இருக்கிறது.