Retirement planning: நம்மில் பலர் ஓய்வுக் காலத்திலாவது கோடீஸ்வரர் ஆக வேண்டும் என நினைத்து அதன்படியே 1 கோடி ரூபாயை சேர்த்துவிடுகிறார்கள். அந்த ரூ.1 கோடி தொகுப்பு நிதி அவர்களின் ஆயுள் முழுக்க போதுமானதாக இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சிலர் கையில் மொத்தமாக பணம் இருக்கும் விஷயம் தெரிந்த பிள்ளைகள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பல்வேறு முக்கிய காரணங்களை சொல்லி கேட்கும் போது மறுக்க முடியாமல் கொடுத்துவிடுகிறார்கள். இதனால், சில ஆண்டுகளிலேயே செலவுக்கு பணம் இல்லாமல் பிள்ளைகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
ஓர் உண்மை சம்பவத்தை பார்ப்போம். பழனி என்பவர் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பி.எஃப். சேமிப்பு, பணிக் கொடை எல்லாம் சேர்ந்து சுமார் ரூ.1 கோடி வந்தது. கடைசி மகனுடன் தான் வசித்து வந்தார். அந்த மகனுக்கு ரூ.60 லட்சம் வீட்டுக் கடன் இருந்தது. அந்தக் கடனை முழுவதுமாக அடைக்க பழனியை வற்புறுத்தி அவரின் மகன் மற்றும் மருமகள் கேட்டனர்.
வீட்டுக் கடன் அடைந்துவிட்டால், குடும்பச் செலவுக்கு தாராளமாக பணம் கிடைக்கும். உங்கள் செலவுக்கு தேவையான பணத்தை எங்களிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர். பழனியும் பிள்ளைதானே என ரூ.60 லட்சத்தை வீட்டுக் கடன் அடைக்க கொடுத்தார். ஆனால், சில மாதங்கள் கழித்து, வார விடுமுறையை ஜாலியாக கழிக்க இ.சி.ஆர் பகுதியில் மகன் பண்ணை வீட்டை கடனை வாங்கி வாங்கினார்.
இப்போது அந்தக் கடனுக்கு மாதத் தவணை கட்டி வருவதால், பழனியின் அவசிய செலவுகளுக்கு கூட மகன் பணம் தருவதில்லை. தன் தவறு புரிந்து, மீதியுள்ள பணத்தை காப்பாற்றி கொள்ளும் நோக்குடன் அதனை முதலீடு செய்து கிடைக்கும் தொகையில் வீட்டு வாடகை மற்றும் குடும்பச் செலவுகளை கவனித்துக் கொண்டு மகன் வீட்டின் அருகே வசித்து வருகிறார். நம்மில் பலர் பழனி போல்தான் இருக்கிறார்கள்.
ஓய்வுக் கால தொகுப்பு நிதியை முழுமையாக முதலீடு செய்து அதிலிருந்து வரும் பணத்தை ஆண்டாண்டுக்கு எடுத்து செலவு செய்வதுதான் சரியான வழியாகும்.
தொகுப்பு நிதியை எப்படி நீண்ட காலத்துக்கு பயன்படுத்த முடியும் என்பதை ஓர் உதாரணத்துடன் பார்ப்போம்.
ஒருவரிடம் அவரின் 60 வயதில் ஓய்வுக் கால தொகுப்பு நிதி ரூ.1 கோடி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்தத் தொகையை ஆண்டுக்கு சுமார் 8% வருமானம் தரக் கூடிய ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளார். ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் அதாவது மாதத்துக்கு ரூ. 66,666 கிடைக்கும்.
ரூ.1 கோடியில் 6% அதாவது, ஆண்டுக்கு ரூ.6 லட்சம் அதாவது மாதம் ரூ. 50,000 செலவு செய்வதாக வைத்து கொள்வோம். அதாவது வருமானத்தில் முதல் ஆண்டில் ரூ.2 லட்சம் செலவு செய்கிறோம். இப்படியே அடுத்த ஆண்டுகளிலும் செய்ய, தொகுப்பு நிதி தொகை அதிகரித்து வரும். அதாவது, குறிப்பிட்ட ஆண்டில் கிடைக்கும் வருமானத்தை விட செலவு செய்வது குறைவாக இருந்தால் ஆயுளுக்கும் தொகுப்பு நிதி வரும். மேலும், இடைப்பட்ட காலத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சிறிது அதிக தொகையை எடுத்து செலவு செய்ய முடியும்.
அட்டவணையில் ரூ.1 கோடியை, எத்தனை சதவிகிதம் எடுத்து செலவு செய்தால் எத்தனை ஆண்டுகளுக்கு வரும் என்கிற விவரம் இருக்கிறது.
அட்டவணையில் ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் 6% . சிகப்பு வண்ணத்தில் காட்டப்பட்டிருக்கும் எண்கள், தொகுப்பு நிதி எத்தனை ஆண்டுகளில் செலவாகிவிடும் என்பதைக் குறிக்கிறது.
தொகுப்பு நிதியை பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்களில் முதலீடு செய்வதாகும், அதற்கு ஆண்டுக்கு 10% வருமானம் கிடைப்பதாகும். தொகுப்பு நிதியில் 5% ஆண்டுக்கு ரூ.5 லட்சம் அதாவது மாதம் ரூ.41,665 செலவு செய்தால் தொகுப்பு நிதி 35 ஆண்டுகளுக்கு வரும். இதுவே மாதம் ரூ.50,000 செலவு செய்தால் தொகுப்பு நிதி 25 ஆண்டுகளுக்கு வரும்.
அடுத்த வாரம் ‘ஓய்வுக் கால செலவுகளுக்கான அரசின் முக்கியத் திட்டம்: பற்றி பார்ப்போம்.