அதானி குழுமம் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததா என கண்டறிய அமெரிக்கா விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரத்தில் அதானி குழுமம் மட்டுமல்லாமல் அதன் தலைவர் கவுதம் அதானி மீதும் அமெரிக்கா விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
அதானி குழுமம் வர்த்தகம், பசுமை மின்சக்தி, எரிசக்தி, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மீடியா, சிமெண்ட் என பல்வேறு துறைகளில் தொழில் செய்து வருகிறது. ஏற்கெனவே அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு தகவல் வெளியிட்டது. இதனால் அதானி நிறுவனப் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன.
இந்த நிலையில், தற்போது அதானி குழுமத்துக்கு மற்றொரு சிக்கல் வந்திருக்கிறது. இந்தியாவில் மின்சக்தி துறையில் தனக்கு சாதகமாக செயல்படுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் வழங்கியதா என அமெரிக்காவின் அட்டர்னி அலுவலகமும், நீதித் துறையின் மோசடி தடுப்பு பிரிவும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளன.
இவ்விவகாரத்தில், இந்தியாவைச் சேர்ந்த அசுர் பவர் குளோபல் நிறுவனத்தையும் அமெரிக்கா விசாரித்து வருகிறது. இந்தியாவில் அதானி குழுமம் லஞ்சம் கொடுத்திருந்தாலும்கூட, அதை ஏன் அமெரிக்கா விசாரிக்க வேண்டும் எனில், வேற்று நாடுகளை சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும், அதில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருந்தால், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க அமெரிக்க சட்டங்கள் அனுமதி அளிக்கின்றன.
அதானி குழும நிறுவனங்களில் பல்வேறு உலக முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். எனவேதான் லஞ்சப் புகார் தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது தலைவர் மீதான விசாரணை குறித்து எங்களுக்கு தெரியாது. நாங்கள் உயர் தர நிர்வாகம் கொண்ட நிறுவனம். இந்தியா மற்றும் இதர நாடுகளின் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டங்களுக்கு முழுவதும் இணங்கி செயல்படுகிறோம்” என்று தெரிவித்துள்ளது.