கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் ஏ.கே.ஆன்றணியும், மறைந்த முன்னாள் முதல்வர் கே.கருணாகரனும் ஒரு காலத்தில் கட்சியில் கோஷ்டி அரசியலில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் கோஷ்டிக்கு ‘ஏ குருப்’, ‘ஐ குரூப்’ என பெயர்கள் இருந்தன. இப்போது புதிய கோஷ்டிகள் வந்துவிட்டதால் பழைய கோஷ்டிகள் மங்கத்தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதல்வர் ஏ.கே.ஆன்றணியின் மகன் அனில் ஆன்றணி கடந்த ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். அதேபோன்று காங்கிரஸில் மற்றொரு கோஷ்டிக்கு தலைமை வகித்த முன்னாள் முதல்வர் மறைந்த கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தார். காங்கிரஸ் பெருந்தலைகளின் வாரிசுகள் பா.ஜ.க-வில் இணைந்த பிறகு ஒரே மேடையில் சந்தித்த நிகழ்வு நேற்று நடந்தது.
பா.ஜ.க-வில் இணைந்த அனில் ஆன்றணி இப்போது பத்தனம்திட்டா நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பத்தனம்திட்டாவில் பொதுக்கூட்டம் மூலம் பிரசாரம் செய்தார். அந்த பிரசார பொதுக்கூட்டத்தில் சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலும் கலந்துகொண்டார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் பத்மஜா வேணுகோபால் பேசுகையில், “பெண்ணாக இருந்தால் காங்கிரஸில் மரியாதையே இல்லை. அதிலும் முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் பிள்ளைகள் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டாம் என்ற நிலைதான் உள்ளது. நான் அனுபவித்த வேதனைகளை அறிந்தால் எந்தந்தை என்னை வெறுக்கமாட்டார். நான் அனுபவித்த வேதனை கட்சி நிர்வாகிகளுக்கு தெரியும், தலைவர்களுக்கு தெரியாது. என் சகோதரனான காங்கிரஸில் எம்.பி-யாக இருக்கும் கே.முரளீதரன் அதை விரைவில் புரிந்து கொள்வார். அவருக்கு கம்பளம் விரிக்கும் விதமாகத்தான் நான் பா.ஜ.க-வுக்கு வந்துள்ளேன். இந்த தேர்தலுடன் காங்கிரஸ் அஸ்தமனம் ஆகும். நானும் அனில் ஆன்றணியும் முன்னாள் முதலமைச்சர்களின் பிள்ளைகள். கேரளாவில் முதல்வர்களின் பிள்ளைகள் பலர் இன்னும் பா.ஜ.க-வுக்கு வருவார்கள்.
கே.கருணாகரன், ஏ.கே.ஆன்றணி ஆகியோர் காங்கிரஸில் கோஷ்டி அரசியல் செய்தார்கள். அவர்களின் பிள்ளைகளான நாங்கள் இருவரும் நட்பாக இருந்தோம். அவர்கள் கோஷ்டி அரசியல் செய்வார்கள், நாங்கள் அதை கண்டுகொள்ளாமல் சொந்த சகோதரர்களைப்போன்று அன்பாக இருந்தோம். காங்கிரஸ் கட்சியில் நான் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டபோது அழைக்காமலே எனக்காக வந்து பிரச்சாரம் செய்தவர் அனில் ஆன்றனி. அதனால்தான் நான் அவருக்காக முதலில் பிரசாரம் செய்ய வந்திருக்கிறேன்” என்றார்.
காங்கிரஸில் தனது தந்தை கே.கருணாகரனும், இப்போது காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருக்கும் ஏ.கே.ஆன்றணியும் கோஷ்டி அரசியல் செய்தனர் என பா.ஜ.க மேடையில் பத்மஜா வேணுகோபால் பேசியது விவாதத்தை கிளப்பி உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY