மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகக் கூறி 23 வகையான நாய்களுக்குத் தடை விதித்துள்ளது மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம்.
செல்லப் பிராணிகள் வளர்ப்பின் மீது கொண்ட பிரியத்தின் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இன நாய்களைப் பலரும் வளர்த்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் சாதுவான நாய்கள் பாசத்திற்காகவும், மூர்க்கமான நாய்கள் பாதுகாப்பிற்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்த மூர்க்கமான வெளிநாட்டு இனத்தைச் சேர்ந்த நாய்கள் ஓநாய், சிங்கங்களைப் போல ஆள் உயரத்திற்கு வளர்பவை. சில நேரங்களில் உரிமையாளர்களையே கடிக்கும் அளவுக்கு ஆபத்தான நாய்களாகவும் மாறிவிடுகின்றன.
இந்நிலையில் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகக் கூறி 23 வகையான நாய்களுக்குத் தடை விதித்துள்ளது மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம். அதுமட்டுமின்றி, தடை விதிக்கப்பட்டிருக்கும் நாய்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருக்கக் கருத்தடை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு, இந்தியாவிலிருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், “மூர்க்கமான வளர்ப்பு நாய்களின் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக அமெரிக்கன் புல்டாக், பிட்புல் டெரியர், ராட்வீலர், மாஸ்டிப், டோர்ன்ஜாக், சர்ப்லானினாக், தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய், ஜப்பானிய தோசா, அகிதா, மாஸ்டிப்ஸ், டெரியர்கள், ரோடீசியன் ரிட்ஜ்பேக், ஓநாய் நாய்கள், கனாரியோ,
அக்பாஷ் நாய், மாஸ்கோ காவலர் நாய், கேன் கோர்சோ உள்ளிட்ட 23 வகையான மூர்க்கமான நாய்களை விற்பனை செய்வதற்கும், செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கும் தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் இந்த இன நாய்கள் மேலும் இனப்பெருக்கம் செய்யாமல் இருக்கக் கருத்தடை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட நாய் இனங்களை விற்பனை செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் உரிமம் அல்லது அனுமதி வழங்கக் கூடாது” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.