தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை தொழில் நிறுவனங்களின் முக்கிய அடையாளமாகும். சிறு குறு நடுத்தர தொழில், பம்ப் மோட்டார் உற்பத்தி, ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் கோவைக்கு தனித்த அடையாளம் உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப துறையிலும் கோவை தடம் பதித்து வருகிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. எதிர்காலத்தில் கோவையின் அடையாளமாக ஐ.டி துறையை மாற்றுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெங்களூர் போன்ற நகரங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் கோவையில் தங்களின் கிளைகளைத் திறந்து வருகின்றன.
சரவணம்பட்டி, அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை, அண்ணா பல்கலைக்கழகம் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூ.1,100 கோடி மதிப்பில் கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தொழில் துறையினர் கூறுகையில், “கடந்த ஜனவரி மாதம் நிலவரப்படி, கோவையில் 744 ஐ.டி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐ.டி துறையில் 20 சதவிகித வளர்ச்சி பதிவு செய்யப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் 30 லட்சம் சதுரடி பரப்பளவில் தொழில்நுட்ப பூங்காவாக விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
கோவையின் உள்கட்டமைப்பு, காலநிலை, வாழ்க்கைத்தரம் காரணமாக ஐ.டி நிறுவனங்கள் கோவைக்கு அதிகம் வருகின்றனர். கோவையில் அதிகளவு உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. மாணவர்கள் படித்தவுடன் ஐ.டி துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே, கோவை மாவட்ட ஐ.டி துறையில் மிகப் பெரிய வளர்ச்சியை அடையும்.” என்றனர்.
பெங்களூருவைப் போல கோவையும் இன்னொரு பெரிய ஐ.டி ஹப் ஆகும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. தமிழக அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!