சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து விட்டு தற்போது பிரிந்து சென்று விட்ட கணவரைத் தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு குடும்ப நல நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் நடிகை தீபா.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’நாம் இருவர் நமக்கு இருவர்’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் நடிகை தீபா. திருமணமாகி ஒரு மகன் இருந்த நிலையில் கணவருடன் விவாகரத்தாகிவிட மகனுடன் தனியே வசித்து வந்தார்.
இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட பல சீரியல்களின் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்து வருகிற கணேஷ் பாபுவுக்கும் தீபாவுக்கும் இடையில் நட்பு உண்டாக, பிறகு இருவரும் கணவன் மனைவியாக சில வருடங்கள் வாழ்ந்திருக்கின்றனர். இந்நிலையில் சில மாதங்களூக்கு முன் தனக்கும் கணேஷ் பாபுவுக்கும் திருமணம் நடந்து விட்டதாக தீபாவே அறிவித்தார். ஆனால், இந்தத் திருமணத்தை கணேஷ் பாபுவின் வீட்டார் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
எனவே திருமணம் முடிந்த கையோடு தன் வீட்டாரிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டு வந்து அழைத்துச் செல்வதாக தீபாவிடம் கூறிவிட்டுச் சென்ற பாபு அதன் பிறகு அவரது வீட்டிலேயே தங்கி விட்டாராம்.
தீபாவும் எத்தனையோ வழிகளில் முயற்சி செய்து பார்த்தும் பாபுவைச் சந்திக்கக் கூட முடியவில்லை. எனவே கடைசியாக நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறியிருக்கிறார்.
தீபாவிடம் பேசினோம்.
‘’நாங்க கல்யாணம் செய்துகிட்டது சின்னத்திரை வட்டாரத்துல எல்லாருக்கும் தெரியும். கல்யாணத்துக்குப் பிறகு எங்கூட வாழ மறுத்து அவர் வீட்டுலயே இருக்கிறார். அவரும் விருப்பப் பட்டுதான் எங்க கல்யாணம் நடந்தது. ஆனா இப்ப அவரை அவங்க வீட்டுல கிட்டத்தட்ட ஹவுஸ் அரஸ்ட் மாதிரிதான் பண்ணி வச்சிருக்காங்க. நான் அவரைத் தேடிப் போனப்ப அவரின் அம்மா என்னை சாதியைச் சொல்லித் திட்டி அனுப்பினார்.
போலீசுக்குப் போனேன். ஆனா அவரது குடும்பப் பின்னணி காரணமா போலீசும் என் புகார் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத சூழல்லதான் நீதிமன்றத்துக்கு வர வேண்டியதாயிடுச்சு.
இப்பவும் அவரை என்கூட சேர்ந்து வாழ உத்தரவிடுமாறுதான் கோரிக்கை வச்சிருக்கேன். நீதிமன்றத்துல எனக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்னு நம்பறேன்’’ என்கிறார் இவர்.