உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் ஆணையம் மூன்று உயர் பொறுப்புகளில் இருப்பவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. அதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், அவருக்கு அடுத்த இடத்திலிருந்த அனூப் சந்திர பாண்டே பிப்ரவரி 14 அன்று 65 வயதை அடைந்ததால் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு அடுத்த இடத்திலிருந்தவர்தான் அருண் கோயல். ஒருவர் பணி ஓய்வுபெற்ற நிலையில், இன்னும் சில நாள்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியானது.
இதற்கிடையில்தான் டிசம்பர் 5, 2027 வரை பதவிக்காலம் இருந்த அருண் கோயல் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அருண் கோயலின் இந்த திடீர் ராஜினாமா இந்தியா அளவில் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இன்னும் சில நாள்களில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், இந்தியாவில் இப்போது ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே பணியில் இருக்கிறார்.
இது தேர்தல் ஆணையமா அல்லது தேர்தல் புறக்கணிப்பா? நான் முன்பே கூறியது போல், நமது சுதந்திர அமைப்புகளின் அழிவை நிறுத்தவில்லையென்றால், சர்வாதிகாரத்தால் நமது ஜனநாயகம் பறிக்கப்படும். தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் புதிய நடைமுறை, தற்போது ஆளும் கட்சிக்கும் பிரதமருக்கும் அனைத்து அதிகாரங்களையும் திறம்பட வழங்கியுள்ள நிலையில்,
தேர்தல் ஆணையரின் (அனூப் சந்திர பாண்டே) பதவிக்காலம் முடிந்து 23 நாள்கள் ஆகியும் புதிய தேர்தல் ஆணையரை ஏன் நியமிக்கவில்லை? இந்தக் கேள்விகளுக்கு மோடி அரசு பதிலளிக்க வேண்டும். நியாயமான விளக்கத்துடன் மக்களுக்கு விளக்கமளியுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், “தேர்தல் ஆணையரின் இந்த செயல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே இருக்கிறார் …
இந்த தேர்தல் ஆணையத்தில் என்னதான் நடக்கிறது? இதனால், ஒட்டுமொத்த நாடும் கவலையில் உள்ளது. சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என நாடே கவலையில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.