தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களுக்கு வயது முதிர்ந்த பக்தர்களை அழைத்துச் செல்லும் திட்டம் சமீபத்தில் இந்துசமய அறநிலையத்துறையால் தொடங்கப்பட்டது.
இதில் முதியவர்கள் ஆன்மிகத் தலங்களுக்குச் செல்லப் போக்குவரத்துச் செலவு, தங்கும் இடம், உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும் அவர்களுக்குத் தேவையான போர்வை, குளியல் சோப், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 200 முதியவர்கள் 6 பேருந்துகளில் பழநியில் இருந்து அறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி பழநி தண்டாயுதபாணி நிலையத்திலிருந்து 200 பேரையும் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
அவர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள பழமுதிர்சோலை சென்றுவிட்டு அங்கிருந்து திருப்பரங்குன்றம் செல்வர். பிறகு அங்கிருந்து திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி சென்றுவிட்டு மீண்டும் பழநியில் ஆன்மிகப் பயணத்தை முடித்துக்கொள்ள உள்ளனர்.