ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக நீலகிரி விளங்கி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நீலகிரியை நோக்கி படையெடுக்கும் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரிக்கு வருகைத் தரும் பயணிகளை மகிழ்விக்க மே மாதம் முழுவதும் கோடைவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அரசுத் தாவரவியல் பூங்காவில் நுற்றாண்டைக் கடந்து நடத்தப்படும் மலர்க் கண்காட்சி முதல் நறுமண பொருள்கள் கண்காட்சி வரை பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான கோடைவிழா தேதிகள் எப்போது வெளியாகும் என சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மலர்க் கண்காட்சி மற்றும் பழக் கண்காட்சி நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஊட்டியிலுள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் அருணா, “2024 கோடை சீசனை முன்னிட்டு ஊட்டியில் உள்ள அரசுத் தாவரவியல் பூங்காவில் 17-05-2024 முதல் 22-05-2024 வரை 6 நாள்கள் மலர்க் கண்காட்சி நடைபெற இருக்கிறது. மேலும், 24-05-2024 முதல் 26-05-2024 வரை குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி மூன்று நாள்களும் நடைபெற இருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது” என்றார்.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரலாம் என்பதால் பல்வேறு கண்காட்சிகள் ரத்தாக வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர்.