உயிர் வாழ அடிப்படைத் தேவை நீர். ஆனால், தண்ணீர் பட்டாலே அலர்ஜி இருந்தால் என்ன செய்வது…. அமெரிக்காவின் தென் கரோலினாவைச் சேர்ந்த 22 வயது பெண் லோரன் மான்டெஃபுஸ்கோ. வில்மிங்டன் பல்கலைக்கழகத்தில் மாணவியாக உள்ளார்.
இவரின் 12 வயதில் தண்ணீரில் இருந்தபோது அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 19 வயதில் `அக்வாஜெனிக் அர்டிகேரியா’ (Aquagenic urticaria) என்ற பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த பாதிப்பால் குளிக்கும்போது அவருக்குக் கடுமையான அரிப்பு ஏற்படுகிறது. இது ஒரு மணி நேரம் வரை நீடிக்கிறது.
இதில் சங்கடமான விஷயம் என்னவென்றால் இந்தப் பிரச்னைக்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இவரது நிலைமை இன்னும் மோசமடைந்து வருகிறது.
முடிந்தவரை குளிப்பதைத் தவிர்த்து விடுகிறார். தள்ளியும் போடுகிறார். எந்த அளவிற்குத் தண்ணீரைத் தவிர்க்க முடியுமோ அந்த அளவிற்கு விரைவாகக் குளித்துவிட்டு வந்துவிடுகிறார். சில சமயங்களில் Body wipes பயன்படுத்தி உடலைச் சுத்தம் செய்து கொள்கிறார். அரிப்பில் இருந்து விடுபட தன் நகங்களை வைத்து தோலில் அதிக வலியை ஏற்படுத்திக் கொள்கிறார்.
அக்வாஜெனிக் அர்டிகேரியா என்ற அரிய பாதிப்பும், அறிகுறிகளும்…
உலகம் முழுவதும் இதுவரையில் இந்த அரிய நோயால் 50 முதல் 100 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் கூறியுள்ளது. இந்த ப்பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
அக்வாஜெனிக் அர்டிகேரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோலில் மீது நீர் படும்போது, அரிப்பு ஏற்படுகிறது. கைகள், மார்பு மற்றும் கழுத்து என ஒன்று முதல் மூன்று மில்லிமீட்டர் விட்டத்தில் தோல் சிவப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. இந்த அறிகுறிகள் 30 நிமிடங்களுக்குள் தொடங்கி, 2 மணி நேரம் வரை நீடிக்கும். சில மணி நேரத்திற்குப் பின்னர் தானாகவே அறிகுறிகள் நின்று விடும்.
தோலானது தண்ணீர், வியர்வை அல்லது கண்ணீரில் படும்போதெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது. மற்றபடி தண்ணீரைக் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. மாதவிடாய் சமயங்களில் கூடுதலாக பாதிக்கப்படுகிறார் என்று தெரிவிதுள்ளனர்.