முகேஷ் அம்பாணியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானி -தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் இருவருக்கும் ஜூலை 12ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதையொட்டி நடக்கும் திருமணக் கொண்டாட்ட நிகழ்வு மார்ச் 1 முதல் 3ம் தேதி (இன்று) வரை நடைபெற்று வருகிறது. குஜராத், ஜாம்நகரில் மூன்றாவது நாள்கள் நடைபெற்று வரும் இந்நிகழ்வில் அமிதாப் பச்சன், ஷாருக் கான், ரஜினிகாந்த், தோனி, சச்சின், பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் என உலகெங்கிலும் இருக்கும் தொழிலதிபர்கள், இந்திய சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் எனப் பலரும் இவ்விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு ‘வந்தாரா’ வன விலங்கு மையத்தில் ‘A Walk on the Wildside’ நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆனந்த் அம்பானி தனது பெற்றோர்கள் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “என்னுடைய வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது என்று நினைக்கிறார்கள். நானும் நிறைய வலிகளை அனுபவித்திருக்கிறேன். சிறுவயதிலிருந்தே உடல் ரீதியாகப் பல்வேறு பிரச்னைகளை அனுபவித்திருக்கிறேன்.
என் அப்பாவும் அம்மாவும் எப்போதும் எனக்குத் துணையாக நிற்கிறார்கள், அவர்கள் ஒருபோதும் என்னைக் கைவிட்டதில்லை. ‘எதையும் என்னால் செய்ய முடியும்’ என்ற தன்னம்பிக்கையை எனக்கு உணரச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்றார். இதைக் கேட்ட உடனே முகேஷ் அம்பானி பெருமிதத்துடனும் கண்ணீருடனும் கைதட்டினார்.
தொடர்ந்து பேசிய ஆனந்த் அம்பானி, “எங்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இந்த மூன்று நாள்களும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த மிகப்பெரிய விழா ஏற்பாட்டைச் செய்தவர் என் அம்மா. கடந்த நான்கு மாதங்களாக அவர் ஒரு நாளைக்கு 18-19 மணி நேரம் வேலை செய்திருக்கிறார்.
என் குடும்பத்தினர் தூங்காமல்கூட வேலை செய்து எனக்காக இந்த விழாவை ஏற்பாடு செய்தார்கள். ராதிகா எனக்குக் கிடைத்திருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. அவரை நான் முதன்முதலில் பார்த்தபோது எரிமலையும், சுனாமியும் என் இதயத்திற்குள் ஏற்பட்டதுபோல் இருந்தது. அந்த அளவிற்கு அவரை நான் நேசித்திருக்கிறேன். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பவர் அவர். என் தாத்தா எப்போதும் கனவு காணச் சொல்வார். வாழ்க்கையில் எனக்கும் நிறைய கனவுகள் இருக்கின்றன. அதை நிச்சயம் சாத்தியப்படுத்துவேன்” என்று மகிழ்ச்சி பொங்க பேசியிருக்கிறார்.