அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கில், அமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வாதங்களை எடுத்து வைத்தார். அப்போது அவர், “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் பழிவாங்கும் நோக்கில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆதாரங்களை புறக்கணித்துவிட்டு வழக்கு தொடர்வது எப்படி நியாயமான விசாரணையாகக் கருத முடியும்… வழக்கு பதிவுசெய்யும் முன்பு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை பரிசீலித்திருக்க வேண்டும்.

வழக்கில் முதல் புலன் விசாரணை அதிகாரி சேகரித்த ஆதாரங்களை மாற்றாமல், கூடுதல் ஆதாரங்களை சேர்ப்பது, மறு விசாரணை அல்ல; மேல் விசாரணைதான். இந்த மேல் விசாரணையும், காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதலை பெற்றே மேற்கொள்ளப்பட்டது. மேல் விசாரணைக்குப் பின், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்கலாம். அதற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எந்த தடையும் இல்லை” எனக் கூறி, வாதத்தை நிறைவு செய்தார்.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை அழைத்து, “எத்தனை ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கிறீர்கள்?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ஏழு ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை புலன் விசாரணை செய்து வருவதாக புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் பதிலளித்தார்.

“இந்த ஏழு ஆண்டுகளில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூர்வமான வாதத்தின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்தியிருக்கிறீர்களா… 2016-ம் ஆண்டு விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல என பதில் மனு தாக்கல் செய்யும்போது, மேல் விசாரணை நடத்த தோன்றவில்லையா… 2021-ல் திடீரென மேல் விசாரணை செய்ய வேண்டும் என தோன்றியது ஏன்?” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தங்கம் தென்னரசு

இதற்கு பதிலளித்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூர்வமான வாதத்தின் அடிப்படையில், மேல் விசாரணை கோரப்பட்டதாகத் தெரிவித்தார். இதே போன்று விசாரணை அறிக்கையில், ஆறு தீர்ப்புகள் மேற்கோள்காட்டப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, அதில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு தீர்ப்பையும் விளக்குமாறு புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனிடம் கூறினார். அதற்கு பூமிநாதன், தனக்கு அது தெரியாது என பதிலளிக்க… “உங்கள் விசாரணை அறிக்கையில்தானே குறிப்பிடப்பட்டிருக்கிறது… அது உங்களுக்கே தெரியாதா?” எனக் கேள்வியெழுப்பினார்.

“இதே நடைமுறையை சாதாரண வழக்குகளில் பின்பற்றுவீர்களா… குப்பனுக்கும் கருப்பனுக்கும் இதே நடைமுறையை பின்பற்றுவீர்களா?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதத்துக்காக விசாரணையை மார்ச் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.