பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வெப்சீரியஸ் இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே விளம்பர மாடலிங்கில் நடித்துள்ளார். அதோடு பாலிவுட் நட்சத்திரங்களில் வாரிசுகள் இணைந்து நடித்த வெப்சீரியஸ் ஒன்றில் சமீபத்தில் சுஹானா கான் நடித்திருந்தார். அதன் மூலம் திரைப்படத்துறையில் சுஹானா கான் அறிமுகமாகி இருக்கிறார்.
இந்த வெப்சீரியஸில் அமிதாப்பச்சன் பேரன், ஸ்ரீதேவி மகள் குஷி கபூர் உட்பட பலர் நடித்து இருந்தனர். ஷாருக்கான் மகள் சுஹானா கான் வெப்சீரியஸில் நடித்ததற்காக கிடைத்த பணத்தை தனது பெற்றோரிடம் கொடுக்காமல் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு நிலத்தில் முதலீடு செய்து இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கடற்கரை நகரமான அலிபாக் அருகில் உள்ள தால் என்ற கிராமத்தில் புதிய நிலத்தை வாங்கி இருக்கிறார். 78361 சதுர அடி கொண்ட அந்த நிலத்தை சுஹானா கான் ரூ.9.5 கோடிக்கு வாங்கி இருக்கிறார். இதற்காக 57 லட்சத்தை முத்திரை தீர்வையாக செலுத்தி இருக்கிறார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுஹானா கான் இதே பகுதியில் 1.5 ஏக்கர் நிலத்தை 12.91 கோடி கொடுத்து வாங்கினார். அலிபாக்கில் ஷாருக்கானும் நிலம் வாங்கி இருந்தார். அலிபாக்கில் இருந்து 12 நிமிடத்தில் காரில் செல்லும் தூரத்தில் ஷாருக்கான் நிலம் வாங்கி இருக்கும் தால் கிராமம் இருக்கிறது. கடற்கரையையொட்டி இருக்கும் நிலத்தில் ஷாருக்கான் பங்களா கட்டி இருக்கிறார்.
அதில் நீச்சல் குளம், ஹெலிகாப்டர் இறங்கும் இடம் போன்ற வசதிகள் இருக்கிறது. மும்பையில் இருந்து ஹெலிகாப்டரில் சென்று தனது பண்ணை வீட்டில் இறங்கும் வகையில் கட்டி இருக்கிறார்.
இதே பகுதியில் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் பங்களாக்கள் இருக்கிறது. இது தவிர தொழிலதிபர்களுக்கும் சொத்துக்கள் இருக்கிறது.
மும்பையில் இருந்து படகு மூலம் அலிபாக் செல்ல முடியும். படகில் செல்லும் போது படகில் கார்களையும் எடுத்துச்செல்ல வசதி இருக்கிறது.
அலிபாக்கில் பங்களாக்கள் 8 கோடியில் இருந்து 70 கோடி வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டில் ஷாருக்கான் நடித்த மூன்று படங்களும் சூப்பர்ஹிட் கொடுத்துள்ளது.