ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
இவர்களின் திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி நடைபெற இருக்கிறது. இசை, நடனம், விளையாட்டுகள், வேடிக்கை நிகழ்ச்சிகள் என மிகப் பிரமாண்டமான முறையில் மும்பையில் நடைபெற உள்ளது. இவர்களின் திருமணத்தை முன்னிட்டு மார்ச் 1 முதல் 3-ம் தேதி வரை குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள பிரமாண்ட ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் உலக பிரபலங்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலகப் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காகச் சத்குரு ஜக்கி வாசுதேவ், பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அமிதாப் பச்சன், ஷாருக்கான், ரஜினிகாந்த், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்தச் சிறப்பு விருந்தினர்களுக்கு மும்பை மற்றும் டெல்லியிலிருந்து ஜாம்நகருக்கு விமானங்களும் புக் செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, விருந்தினர்கள் எந்தெந்த ஆடைகளில் வரவேண்டும் என்பதான ‘டிரெஸ்கோடு’ அடங்கிய விளக்கப் புத்தகமும் வழங்கப்பட்டுள்ளது. வந்திருக்கும் விருந்தினர்களைப் பிரத்யேகமாகக் கவனித்துக்கொள்ள ஹேர் ஸ்டைலிஸ்ட், மேக்கப் கலைஞர்கள் போன்றவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.