கடந்த 2022 ஜனவரியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியின் பதவி காலம் நிறைவடைந்து விட்டது. இதையடுத்து புதிய தலைவரை நியமிப்பதற்கான வேலைகளில் இறங்கியது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. அந்த நேரத்தில் கர்நாடக தேர்தல், ராகுல் காந்திக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு, பதவி பறிப்பு போன்றவை குறுக்கிட்டது. இதனால் தலைவர் மாற்றம் கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது. இருப்பினும் அந்த பதவியை எட்டிப்பிடிக்க செல்வப்பெருந்தகை, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, ரூபி மனோகரன் என பலரும் முட்டி மோதினார்கள்.
பதிலுக்கு அழகிரியும் ஆடுபுலி ஆட்டம் ஆடி ஒவ்வொரு காயாக வீழ்த்தி வந்தார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு சத்தியமூர்த்தி பவனில் களேபரம் வெடித்தது. அதில், ரூபி மனோகரனின் ஆட்களும், அழகிரி கோஷ்டியும் மோதிக்கொண்டனர். இங்கு தனக்கெதிரான அரசியலை அதிரடியாக வீழ்த்தும் அழகிரி, மறுபக்கம் டெல்லியிடம் நல்ல பெயரை காப்பாற்றி வந்தார். . அதாவது ‘மகளுக்கு திருமணம், நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற வேண்டும், கட்சியை பலப்படுத்த வேண்டும்’ என்றெல்லாம் சொல்லி சரிக்கட்டி வந்தார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “பல்வேறு காரணங்களினால் கே.எஸ்.அழகிரியை மாற்றாமல் இருந்தது அகில இந்திய தலைமை. இந்த சூழலில் சமீபத்தில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடந்த போதும் சென்னைக்கு டெல்லியின் முக்கிய தலைவர்கள் வந்திருந்த போதும் அழகிரியை மாற்ற வேண்டும் என ஒன்றை காலில் எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் நின்றனர். இதில் கடுப்பான அழகிரி ‘தேர்தல் நெருங்கட்டும்.. என்னிடம் தானே வர வேண்டும். அவர்களை பார்த்துக்கொள்கிறேன்’ என்கிற மனநிலையில் இருந்தார். அதற்கு ஏற்றார் போல தேர்தலும் நெருங்கி வந்தது. மீண்டும் சீட் பெறுவதற்கு தீவிரம் காட்டினர் சிட்டிங் எம்.பிக்கள். ஆனால் தான் ஏற்கெனவே திட்டமிட்டது போல சிட்டிங் எம்.பிக்களை ஓரம் கட்டி விட்டு, தனது ஆதரவாளர்களுக்கு சீட் பெறுவதற்கு முனைப்பு காட்டி வந்தார் கே.எஸ்.அழகிரி.
மோடிக்கு நிகரான தலைவராக ராகுல் காந்தி இல்லை என கார்த்தி சிதம்பரம் பேசியதை பெரிதாக்கியது, கட்சினரை மதிப்பதில்லை ஜோதிமணி என ரத்தத்தில் கையெழுத்து போட வைத்தது, விஷ்ணு பிரசாத்துக்கு எதிராக பிரஸ் மீட் என அனைத்தையும் தனது ஆதரவாளர்கள் மூலமாக கச்சிதமாக செய்து முடித்தவரே, கே.எஸ்.அழகிரி தான் என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர். மறுப்பக்கம் தலைவர் பதவியை எப்படியும் பிடித்தே ஆக வேண்டும் என வியூகம் வகுத்து வந்த செல்வப்பெருந்தகை தரப்பு இதையெல்லாம் புகாராக டெல்லிக்கு அனுப்பியது. இதையடுத்துதான் செல்வப்பெருந்தகைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை பெற்றுக்கொடுத்தார், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
ஆனால் இதை எதிர்தரப்பினர் ரசிக்கவில்லை. ‘பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியில் இருந்த எங்களது வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது’ என கொதித்து வருகிறார்கள். முன்னதாக அவருக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்ட போதே எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக விஜயதரணி தரப்புக்கு ஏக வருத்தம். இந்த சூழலில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது, டெல்லி. மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 9 இடங்களை காங்கிரஸூக்கு ஒதுக்கியது தி.மு.க. இந்த முறை அதனை குறைக்க திட்டமிட்டு இருப்பதாக சமீபத்தில் நடத்த ஆலோசனை கூட்டங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆனால் தொண்டர்களின் விருப்பம் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடங்களையாவது மீண்டும் பெற வேண்டும் என்பது தான். ஆனால் அது செல்வப்பெருந்தகைக்கு கடும் சவாலானதாகவே இருக்கும். ஏற்கெனவே சட்டமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்களை போன்று ஆளும் கட்சிக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருக்கிறது. எனவே சீட் பங்கீட்டின் போதும் தி.மு.கவை எதிர்த்து பேசாமல் மெளனமாக இருந்தால் தொண்டர்களிடத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டு விடும். எனவே தி.மு.கவிடம் மேலும் நல்ல பெயர் எடுப்பாரா? அல்லது தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY