ஹரியானா மாநிலம், பல்வால் கிராமத்தில் 10-ம் வகுப்புப் படிக்கும் 15 வயது சிறுவன் லோகேஷ். இவர் தன் தாய், சகோதரியுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது, இருசக்கர வாகனத்தில் சாலையில் நின்றுகொண்டிருந்த மூன்று இளைஞர்கள், சிறுவனின் தாய், சகோதரியிடம் அத்துமீறி தவறாக நடந்திருக்கிறார்கள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஆத்திரமடைந்து, அவர்களைத் தடுத்திருக்கிறார். அதனால், சிறுவனை மூவரும் சேர்ந்து தாக்கியிருக்கிறார்கள். அப்போதும் எதிர்த்துச் சண்டையிட்டிருக்கிறான்.
சிறுவனைச் சமாளிக்க முடியாத இளைஞர்களில் ஒருவர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சிறுவனைக் குறிவைத்திருக்கிறார். அதைப் பார்த்துப் பதறி ஓடிய சிறுவனைத் துரத்திச் சென்று சுட்டிருக்கிறார். இதில், சிறுவனின் கையில் குண்டு பாய்ந்திருக்கிறது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனுக்கு ரத்தம் அதிகமாக வெளியேறியிருக்கிறது. உடனே சிறுவனின் தாயும், சகோதரியும் சிறுவனைத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். தற்போது சிறுவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து, சிறுவனின் மாமா நடந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் பதிவுசெய்தார். அதனடிப்படையில், தலைமறைவாக இருக்கும் மூன்று பேரையும் காவல்துறை தேடிவருகிறது. முதற்கட்டமாக லோகேஷை சுட்டவர் பத்ரா பகுதியைச் சேர்ந்த கோகன் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.