கேரளாவில் பொதுப்போக்குவரத்தாக இருக்கட்டும்; டூரிஸமாக இருக்கட்டும்; கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டான ஆபீசராக இருப்பார்கள். கேரளச் சாலைகளில் பயணிக்கும்போது கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும்.
ஒரு பெர்சனல் அனுபவம்: கோவையில் இருந்து பாலக்காடு சாலையில் செல்லும்போது, 100 கிமீ வேகத்தில் கார் ஓட்டினேன். அங்கே ஸ்பீடு லிமிட் 90 கிமீதான் என்பது எனக்கு லேட்டாகத்தான் தெரிந்தது. அடுத்த சில மணி நேரத்தில் காரின் புகைப்படத்தை விடுங்கள்; நான் கார் ஓட்டும் புகைப்படத்தோடு (ஆதார் அட்டையில் இருப்பதைவிட அழகாய் இருந்தேன்; அவ்வ்!) டிராஃபிக் சலான் காரின் உரிமையாளருக்கு வந்துவிட்டது. இதுதான் கேரளா.
இது சாமானியர்களுக்கு மட்டுமல்ல; சிஎம் ஆகவே இருந்தாலும் அவர்களுக்கும் இதே விதிமுறைதான் என்பதை நிரூபித்திருக்கிறது கேரள மாநில MVD (Motor Vehicle Department). அண்மையில் முதல்வரின் காருக்கே டிராஃபிக் சலான் அனுப்பப்பட்டிருப்பதுதான் டாக் ஆஃப் தி நேஷன் ஆக இருக்கிறது.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் கியா கார்னிவல் எனும் சொகுசு கார், டிராஃபிக் விதிமீறலில் ஈடுபட்டதாக ஒரு டிராஃபிக் சலான் ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது. சீட் பெல்ட் அணியாததற்காக அந்த சலான் அனுப்பப்பட்டிருக்கிறது.
இது விவாதப் பொருளும் ஆகி இருக்கிறது. ஒரு மாநிலத்தின் முதல்வரே, தனது டிரைவருக்கே டிராஃபிக் நடைமுறைகளைப் பற்றிக் கற்றுத் தரமாட்டாரா? ஓ… இதுதான் விஐபி கலாசாரமா என்றெல்லாம் கமென்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Chief Minister Office (CMO) அலுவலகத்தில் இருந்து இது சம்பந்தமாக ஓர் அறிக்கை ஒன்றும் வெளிவந்திருக்கிறது. அதாவது அந்தக் காரில் விதிமீறலில் ஈடுபட்டது முதல்வர் இல்லை; அவரின் டிரைவர். விதிமீறல் நடந்தபோது முதல்வர் அந்தக் காரில் இல்லை. அவர் அந்த நேரத்தில் Nava Kerala Sadas ப்ராஜெக்ட்டுக்காக சிறப்புப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். எனவே, இந்த அபராதத்தை முதல்வரின் டிரைவரே ஏற்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
2023 டிசம்பர் மாதம் 12-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. முண்டக்காயம் எனும் பகுதியில் இருந்து குட்டிக்கானம் சாலை வழியாக KL01 CV6683 எனும் நம்பர் பிளேட் கொண்ட அந்த கார்னிவல் கார் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது முன் பக்கப் பயணி சீட்பெல்ட் அணியாததற்குத்தான் இப்போது 500 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள்.
இதற்கு முன்பும் இப்படி ஒரு வயலேஷனில் ஈடுபட்டிருக்கிறதாம் முதல்வர் பினராயி விஜயனின் வாகனம். 2017-ல் சிவப்பு சிக்னலைத் தாண்டிச் சென்றதற்காகக் காவல்துறை அதிகாரி ஒருவரால் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தச் சம்பவத்துக்கு சலான் எதுவும் அனுப்பப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.