மக்களவைத் தேர்தல் எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை இருந்து வருகிறது. இதையடுத்து மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க தரப்பிலும், எதிர்க்கட்சி கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. மொத்தம் 48 தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த முறை பா.ஜ.க 26 தொகுதியில் போட்டியிட்டு 24 தொகுதியில் வெற்றி பெற்றது. சிவசேனா 22 தொகுதியில் போட்டியிட்டு 18 தொகுதியில் வெற்றி பெற்றது. இப்போது சிவசேனா உடைந்துவிட்டது. எனவே இம்முறை கூடுதல் தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அதாவது குறைந்தது 28 தொகுதியில் போட்டியிட இருக்கிறது என்கிறார்கள். ஆளும் கூட்டணியில் இடம் பிடித்து இருக்கும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிகள் தலா 10 தொகுதியில் போட்டியிட இருக்கின்றன.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில்,” தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் இருக்கலாம். சிவசேனா கூடுதல் தொகுதிகள் கேட்கலாம். சிவசேனா உடைந்த பிறகு முதல்வர் ஷிண்டே அணியில் 13 எம்.பி.க்கள் இருக்கின்றனர். எனவே சிவசேனா கூடுதல் தொகுதிகள் கேட்டால் பா.ஜ.க. தனது தொகுதியில் இருந்து கொடுக்கும்” என்றார். ஏற்கனவே தங்களது கட்சி 26 தொகுதிக்கு குறைத்து போட்டியிடாது என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து இருந்தார்.
இதேபோன்று எதிர்க்கட்சி கூட்டணியில் சிவசேனா(உத்தவ்) இம்முறை 18 தொகுதியில் போட்டியிட இருக்கிறது. உத்தவ் தாக்கரே 18 தொகுதிகளுக்கு மட்டும் ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இருக்கிறார். மும்பையில் மட்டும் 4 தொகுதிகளுக்கு நியமித்து இருக்கிறார். தொடக்கத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேசும் போது 23 தொகுதிகள் வேண்டும் என்று சிவசேனா(உத்தவ்) தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால் கள நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு 18 தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 11 தொகுதிகளுக்கு உத்தவ் தாக்கரே வேட்பாளர்களையும் முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து அசோக் சவான் வெளியேறி இருப்பதால் எதிர்க்கட்சி கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. =
இன்று சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மராத்தா சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. சட்டமன்ற கூட்டத்திற்கு பிறகு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் அடையும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY