கடந்த 2012 – ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ராமநாதபுரம் பசும்பொன்னில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவின் போது, மதுரை சிலைமான் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த 20 பேர் வேனில் சென்றனர். அப்போது, அருப்புக்கோட்டை வழியாக மதுரை ரிங் ரோடு அருகே வந்தபோது, வேன் மீது சரமாரியாக கற்களை வீசிவிட்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஒரு கும்பல் தப்பி ஓடியது. இந்த வேனில் இருந்த 20 பேர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், புளியங்குளத்தைச் சேர்ந்த ஜெயபாண்டி மகன் சுந்தரபாண்டி, ராஜா மகன் வெற்றிவேல் மற்றும் தேசிங்கு ராஜா, ரஞ்சித் குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ராமர்

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக அவனியாபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து, மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த அரசமகாராஜா என்பவரது மகனான ராமர் பாண்டி என்கிற ராமகிருஷ்ணன்( 36), மணிகண்டன் என்கிற பங்க் மணி(37) கார்த்தி என்கிற காளி கார்த்திக்(36), முத்துவிஜி என்கிற ஊமை(22), சந்திரசேகர் என்கிற மூலக்கரை(31), சோனையா(31) நாகராஜ் என்கிற சோப்பு நாகராஜ்(31), முத்துக்கருப்பன் என்கிற வெள்ளை கோரத்தான்(31), மோகன்(38) விக்னேஷ் என்கிற விக்கி (33), சந்தோஷ் என்கிற சந்தோஷம் (33) என மொத்தம் 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, மதுரை நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அந்த வழக்கு பின்னர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் கடந்த 2017 – ம் ஆண்டு கரூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கு விசாரணைக்காக நேற்று காலை 10 மணியளவில் ஆஜராக முதல் குற்றவாளியான ராமர் பாண்டி என்கிற ராமகிருஷ்ணன், தனது நண்பரான கார்த்தி (26) என்பவருடன் தனது இருசக்கர வாகனத்தில் வந்தார்.

அரவக்குறிச்சி

கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு காலை 11 மணியளவில், கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரவக்குறிச்சி அருகே அவர்கள் சென்றபோது, ராமர் பாண்டி என்கிற ராமகிருஷ்ணன் சென்ற இருசக்கர வாகனத்தை காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தி, ராமர் பாண்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் சுதாரிப்பதற்குள் அவரைக் வெட்டிக் கொன்ற அந்த கும்பல், அவரின் முகத்தை சிதைத்து விட்டு தப்பி ஓடியது. இதில், உடன் சென்ற, கார்த்திக் தடுக்க முற்பட்டபோது அவருக்கும் வெட்டு விழுந்தது. இதனால், அவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், இந்த தகவலை அறிந்த அரவக்குறிச்சி காவல் நிலைய போலீஸார் ஸ்பாட்டில் விசாரணை மேற்கொண்டனர். அதோடு, இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் மற்றும் குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வெட்டிக் கொலை செய்யப்பட்ட ராமர் பாண்டி உடலை உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெட்டி படுகொலை செய்யப்பட்ட ராமர் பாண்டி என்கிற ராமகிருஷ்ணன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் மதுரை, சிவகங்கை, ராம்நாடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராமர் என்கிற ராமகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டிருப்பது பழிக்குப் பழி தீர்ப்பதற்காக, வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த 2012 – ம் வருடம் இவர் சம்பந்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் யாரேனும் இந்தக் கொலையை அரங்கேற்றியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதனால், ராமர் பாண்டியை வெட்டியக் கும்பலில் உள்ளவர்கள் யார், அவர்களை யார் கொலை செய்ய அனுப்பியது என்று பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல ரௌடி ஒருவர் கரூர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் ஆஜராகிவிட்டு திரும்பிய போது, பட்டப்பகலில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ராமர் பாண்டி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனமையில் அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.