சென்னைத் தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியிருக்கும் 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில், ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகள் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், ‘சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டையில் தனி பந்தய தளம் இருக்கிறது. ஆனால், வீதி பந்தயம் என்கிற பெயரில், தீவுத்திடல் உள்ளிட்ட சென்னை மாநகரில் எந்த பகுதியிலும் கார் பந்தயம் நடத்த தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரி ஸ்ரீஹரீஷ், லூயிஸ் ராஜ், மதுரைவீரன், பாலுசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அமர்வின் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கார் பந்தயம் நடத்த அரசு ரூ.42 கோடி செலவு செய்வது தவறு. அனுமதியின்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த பந்தயத்துக்காக அரசு பொது மருத்துவமனை அருகில் வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, “கார் பந்தயம் நடத்துவது அரசின் கொள்கை முடிவு. இதை நீதிமன்றம் ஆராய முடியாது. இந்த பந்தயத்திற்காக அரசு குறைவாகவே செலவிடுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட போட்டியை ஜூன் மாதத்திற்குப் பிறகு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று பிறப்பித்த தீர்ப்பில், “ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடையில்லை. அதே நேரத்தில், பொதுமக்களின் பாதுகாப்பு, நோயாளிகளுக்கு இடையூறு இல்லாமல் உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் நடத்தப்பட வேண்டும். பந்தயம் நடத்தும் ரேஸிங் புரமோசன்ஸ் பிரைவேட் லிமிடட் (Racing Promotions Pvt Ltd), பந்தயத்துக்காக அரசு செலவிட்ட ரூ.42 கோடியை, அரசுக்குத் திருப்பியளிக்க வேண்டும். பந்தயத்திற்கான முழு செலவையும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.