நாடாளுமன்றத்தில் 15 மாநிலங்களைச் சேர்ந்த 56 உறுப்பினர்கள் வரும் ஏப்ரல் மாதம் ஓய்வு பெறவிருக்கின்றனர். இந்த காலி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை எம்.பி பதவிக்கான தேர்தல், பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 15-ம் தேதி (நாளை) கடைசி நாள். இந்த நிலையில், ஒடிசாவின் மாநிலங்களவைக்கு மூன்று இடங்கள் காலியாக உள்ளன.
அதில், பி.ஜே.டி தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக், இரண்டு இடங்களுக்கு இரண்டு கட்சி வேட்பாளர்களைப் பரிந்துரைத்து, மூன்றாவது இடத்தை காலியாக வைத்திருந்தார். இந்த நிலையில்தான், ஒடிசா மாநிலத்திலிருந்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் போட்டியிடப் போவதாக பா.ஜ.க தரப்பு தெரிவித்திருக்கிறது. ஒடிசாவில் மாநிலங்களவைத் தொகுதியில் வெற்றி பெறக் குறைந்தது 37 வாக்குகள் தேவைப்படும் நிலையில்,
ஒடிசா சட்டசபையில் பா.ஜ.கவுக்கு 22 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர். எனவே, 2019-ம் ஆண்டில் பி.ஜே.டி ஆதரவுடன் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுபோலவே, இந்த முறையும், பா.ஜ.க. – பி.ஜே.டி ஆதரவுடன், அஸ்வின் வைஷ்ணவ் தேர்தலைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன், மத்தியப் பிரதேசத்திலிருந்து பா.ஜ.க-வின் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் தவிர உமேஷ் நாத் மகாராஜ், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜார் ஆகிய மூன்று வேட்பாளர்களையும் பா.ஜ.க அறிவித்திருக்கிறது.