ஆண்டுதோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இந்த ஆண்டு பிரதமர் மோடி வருகை, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் போன்றவற்றால் தாமதம் ஏற்பட்டது. முன்னதாக கடந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக அரசு தயாரித்து வழங்கிய அறிக்கையில் சில பகுதிகளை ஆளுநர் ரவி படிக்கவில்லை. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. எனவே இந்த முறை என்ன நடக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையிலும் இருந்து வந்தது. இந்த சூழலில் 12.2.2024-ல் சட்டப்பேரவை கூட்டம் நடக்கும் என அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு. அதன்படி கூட்டம் கூடியது. அவைக்கு ஆளுநர் காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தார், ஆளுநர் ரவி. பிறகு தமிழ்த் தாய் வாழ்த்துடன் இசைக்கப்பட்டு பேரவை தொடங்கியது.

சட்டப்பேரவை நிகழ்வு

அப்போது பேசிய ஆளுநர், சில கருத்துகளை தெரிவித்துவிட்டு உரையை படிக்காமல் அமர்ந்துவிட்டார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் பின்னர் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

அவையில் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில், “மத்திய அரசு ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை நிறுத்தியதால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு சுமார் 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால், ஜி.எஸ்.டி. இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர வேண்டும். மற்ற மாநிலங்களில் மெட்ரோ திட்டத்துக்கு பங்களிப்பு செய்கிறது, மத்திய அரசு. ஆனால் தமிழகத்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே முழு திட்டச்செலவையும் மாநில அரசு செய்ய வேண்டியிருக்கிறது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த மாட்டோம். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் போது சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்” என்பது உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றிருந்தன.

சட்டப்பேரவை

ஆளுநர் உரையை தொடர்ந்து பேசிய அப்பாவு, சில கருத்துக்களை தெரிவித்தார். அதுவும் பின்னர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

அப்போது அவையிலிருந்து வெளியேறினார், ரவி. இதையடுத்து அவை முன்னவர் துரைமுருகன், “2024-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் தமிழ், ஆங்கிலத்தில் தவிர்க்கப்பட்ட ஆளுநர் உரை, இந்த அவைக்கு வழங்கப்பட்ட படியே அவைக்குறிப்பில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்” என்ற தீர்மானத்தை கொண்டுவந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில், “பிப்ரவரி 9-ம் தேதி ஆளுநர் உரை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. அதில் பல தகவல்கள் உண்மைக்கு மாறானதாக இருந்தன. இதையடுத்து தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில், ஆளுநர் உரைக்கு முன்பும் பின்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என சபாநாயகருக்கும் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதப்பட்டது. மேலும், ஆளுநர் உரையானது அரசின் சாதனைகளை, கொள்கைகளை, திட்டங்களைச் சொல்வதாக இருக்க வேண்டுமே தவிர, தவறான தகவல்களை, பாரபட்சமான அரசியல் பார்வைகளைச் சொல்வதாக இருக்கக்கூடாது. ஆனால், அரசு ஆளுநரின் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டது.

சட்டப்பேரவை நிகழ்வு

பிப்ரவரி 12-ம் தேதியன்று சபாநாயகர், முதல்வர் உள்ளிட்டோருக்கு வணக்கம் செலுத்திய ஆளுநர், ஆளுநர் உரையின் சில அம்சங்கள் உண்மைக்கு மாறாக இருப்பதால் அதனை வாசிக்க முடியாது என் கூறினார். சபாநாயகர் தமிழ் வடிவத்தை படிக்கும்போது ஆளுநர் முழுவதுமாக அமர்ந்திருந்தார். சபாநாயகர் உரையை வாசித்து முடித்தவுடன், தேசிய கீதம் வாசிக்கப்படும் என கருதி ஆளுநர் எழுந்தார். ஆனால், ஏற்கனவே இருந்த நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதற்குப் பதிலாக ஆளுநரை நாதுராம் கோட்சேவை பின்பற்றுபவர் என்றெல்லாம் சபாநாயகர் கடுமையாக விமர்சித்தார். இதனால், தனது பதவியின் கண்ணியத்தைக் கருதி ஆளுநர் அவையைவிட்டு வெளியேறினார்” என சொல்லப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ராஜ் பவன் வட்டாரங்கள், “தமிழக அரசு அறிக்கை தயாரித்து அனுப்பியதும் ஆளுநர் ரவி டெல்லிக்கு சென்றார். அங்கு தனது தரப்பு விளக்கத்தை கூறினார். அப்போது ஆளுநர் தரப்பில் “சில தகவல்களை படிக்க முடியாது. அதை தவிர்த்துவிட்டு படித்தால் கடந்த முறையை போல பிரச்னை வரும். எனவே முழுமையாக படிக்காமல் தவிர்க்கலாம்” என சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படியே ஆளுநர் படிக்கவில்லை” என்றன.

இதையடுத்து இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசும் பொருளாகி இருக்கிறது. முன்னதாக கடந்த ஜனவரி 25-ம் தேதி கேரள மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. அப்போது உரையின் 62 பக்க உரையைத் தவிர்த்துவிட்டு கடைசி பத்தியை மட்டும் வாசித்தார் ஆளுநர் ஆரிப் முகமது கான். அப்போது அவர் மொத்தமே 4 நிமிடங்கள்தான் அவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ப்ரியன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “சட்டசபையில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் தொடர் மோதல் ஏற்படுகிறது. கவர்னர் அவையின் கண்ணியத்தை கெடுத்தது மட்டும் இல்லாமல் ஆளுநர் பதவிக்கான கண்ணியத்தையும் கெடுத்து விட்டார். மற்றவர்கள் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று கூறுகிறார். ஆனால் அவரே மதிக்காமல் செல்கிறார். அவருக்கு உரையில் எந்த பங்களிப்பும் கிடையாது. அதில் தவறு இருந்தால் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவார்கள். நான்கு வரியை மட்டும் படித்துவிட்டு கருத்து கூறுவதற்கு உரிமை இல்லை. எனவே தான் அவர் பேசியதை அவை குறிப்பில் இருந்து எடுத்துவிட்டார்கள். மீண்டும் அதை பதிவிட்டது உரிமை மீறல் செயல். அரசு சுமூகமாக இருக்க வேண்டும் என நினைத்தாலும் தொடர் மோதல் மனப்பான்மையை கடைபிடிக்கிறார் ஆளுநர்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.