விவசாயிகளுக்கு அரசு தரப்பில் இருந்து கடன் உதவி வழங்கப்படுகிறது. அந்தவகையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வழங்கப்படும், `விவசாய கடன் அட்டை’ வழங்கும் திட்டம் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டு கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், கடன் உதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து கால்நடை பராமரிப்பு உடுமலை கோட்ட உதவி இயக்குனர் ஜெயராமன் கூறுகையில், “கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருத்துவரிடம் மொத்தமாக நீங்கள் வளர்க்கும் மாடுகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, சான்று பெற வேண்டும். கடன் பெறுவதற்கான உரிய ஆவணங்களை இணைத்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு வங்கி கணக்கு மூலமாக பராமரிப்பு கடன் பெறலாம். மாடுகளின் எண்ணிக்கையை பொறுத்து கடன் தொகை மாறுபடும். 5 மாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஒரு மாட்டிற்கு 14,000 ரூபாயும், 5 மாடுகளுக்கு மேல் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஒரு மாட்டிற்கு 17,500 ரூபாயும் வழங்கப்படும்.
இந்த கடனுக்கு குறைந்த வட்டியே வசூலிக்கப்படும். கடன் தொகையை ஓர் ஆண்டுக்குள் விவசாயிகள் திரும்ப செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு பராமரிப்பு கடன் வழங்குவதற்கான வேலைகள், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.
கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!