புதுக்கோட்டை நகரப் பகுதிக்குட்பட்ட அடப்பன்வயல் 6-ம் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (எ) ஒச்சி கார்த்தி (வயது: 25). இவரும், மேல 6-ம் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது: 29), அடப்பன் வயல் மூன்றாம் வீதியைச் சேர்ந்த தினேஷ் பாபு (எ) நெருப்பு தினேஷ் (வயது: 25), கோவில்பட்டி அருகே உள்ள அண்ணா நகர் புதுத்தெருவைச் சேர்ந்த சொர்ணமூர்த்தி (வயது: 25) ஆகியோரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில், கார்த்திக்கின் தங்கை ஐஸ்வர்யாவை, சீனிவாசன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கார்த்திக் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஐஸ்வர்யாவை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், ஐஸ்வர்யா அவருக்கு திருமணம் செய்து வைத்த நபருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவருடன் வாழாமல், அங்கிருந்து அவரது தாய் வீட்டிற்கு வந்து வசித்து வருகிறார்.

இதற்கிடையில், ஐஸ்வர்யாவை முன்பு காதலித்த சீனிவாசன் மீண்டும் ஐஸ்வர்யாவோடு தொடர்பில் இருந்துள்ளார். இதில் ஐஸ்வர்யாவின் சகோதரர் கார்த்திக்கும், சீனிவாசனுக்கும் இந்த விவகாரத்தில் மோதல் உருவாகியுள்ளது. ‘என் தங்கையை காதலிப்பியா, மரியாதையாக விலகி போய்விடு!’ என்று கார்த்திக், சீனிவாசனை அடிக்கடி கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மீண்டும் ஏற்பட்ட தகராறில் கார்த்திக் உள்ளிட்ட சிலர் சீனிவாசனை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் உயிர் பிழைத்த சீனிவாசன், தொடர்ந்து கார்த்திக்கோடு அவ்வப்போது பிரச்னையில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கார்த்திக் ஏற்கெனவே அடப்பன்வயலில் நடைபெற்ற ஒரு இளைஞரின் கொலை வழக்கில் தொடர்புடையவர்.

இந்த நிலையில்தான், கடந்த பத்து தினங்களுக்கு முன்பு கார்த்திக்கின் தந்தை இறந்திருக்கிறார். அதோடு, கார்த்திக் புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட விசுவதாஸ் நகரில் கடந்த நான்கு ஆண்டுகளாக புது வீடு ஒன்றைக் கட்டி வருவதால், அந்த வீட்டின் பூச்சு வேலை நடைபெற்று வருவதை பார்வையிட சென்றுள்ளார். அப்போது இதனை அறிந்த சீனிவாசன், தனது நண்பர்களான நெருப்பு தினேஷ், சொர்ணமூர்த்தி ஆகியோருடன் அங்கு சென்று கார்த்திக்கை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில், படுகாயமடைந்த கார்த்திக், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட கார்த்திக்

இது குறித்து அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்ட நபர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருக்கோகர்ணம் காவல் நிலைய போலீஸார், கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதோடு, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சீனிவாசன் உட்பட மூன்று கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். தங்கையின் காதல் விவகாரத்தில் முன்விரோதம் ஏற்பட்டு, நண்பர்களாலேயே இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.